×

நிகழ்கால பரதன் என ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் ஓபிஎஸ்- கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

 

நிகழ்கால பரதன் என ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் ஓ.பி.எஸ். அவருக்கு ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் கொடுக்கும் நற்சான்றிதழ் தேவையில்லை என 
கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், ஓ.பி.எஸ் ஆதரவாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொல் புத்தியும், சுய புத்தியும் கிடையாது. கள்ள ஓட்டு போட்டதாக திமுகவினரை ஏன் கட்டி வைத்து அடிக்க வேண்டும். சமூக பொறுப்புள்ள ஒருவர் காவல்துறையினரிடம் தான் பிடித்துக் கொடுக்க வேண்டும்.‌ அதை விடுத்து பொது இடத்தில் வைத்து அடித்து பின் காவல்துறையினரிடம் பிடித்து கொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டவர் ஜெயக்குமார். அந்த வழக்கில் கைதாகி சிறை சென்ற பின் வெளியே வந்தவர் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த தியாகி போல மலர் மாலை அணிந்து ஊர்வலமாக சென்றார்.

 அதேபோல் ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டுகிறேன் எனச் சொல்லி தனது தந்தையின் சமாதியை அந்த இடத்தில் எழுப்பியவர் ஆர்.பி.உதயகுமார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு முதல் காரணமே ஆர்.பி.உதயகுமார் தான்.  ஜெயக்குமார், ஆர்.பி.உதமகுமார்  இருவரும் ஓ.பி.எஸ் குறித்து பேச தகுதியில்லை. அவர்கள் கொடுக்கும் நற்சான்றிதழ் ஓ.பி.எஸ்-க்கு தேவையில்லை. நிகழ்கால பரதன் என ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் ஓ.பி.எஸ் எனக் கூறினார். மத்திய பாஜக அரசின் அமைச்சரவையில் அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் இடம்பெறுவது பிடிக்காமல் அதற்கு முட்டுக்கட்டை போட்டவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயக்குமார். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என எண்ணம் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை  தோற்கடிக்க வேண்டும் என்று வேலை செய்ததாகத் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கைக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” எனத் தெரிவித்தார்.