குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி
இது போன்ற ஆண்கள் தான் கலைஞரை பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இதுதான் புதிய திராவிட மாடலா? என்ற கேள்வியை ஆவேசத்துடன் கேட்டிருந்தார் குஷ்பூ. இதற்கு கனிமொழி எம்பி, ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி பாராட்டும் பொதுக்குழு விளக்க கூட்டம் சென்னை ஆர். கே. நகரில் நடந்துள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் இந்த கூட்டம் நடந்துள்ளது . விழாவில் பேசிய சைதை சாதிக் என்பவர், பாஜக மகளிர் நிர்வாகிகள் குறித்தும், பாஜகவில் இருக்கும் குஷ்பூ, காயத்ரி ரகுராம், நமீதா, கௌதமி உள்ளிட்ட நடிகைகளை அவ, இவ என்றும், ஒருத்தி இருக்காளே அவ பேரு என்ன என்று ஒருமையில் பேசுகிறார். இதை மேடையில் இருப்பவர்கள் அனைவரும் ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
திமுகவில் நாங்கள் கட்சி வளர்த்த போது சீதாபதி, பலராமன், டி. ஆர். பாலு என்று தற்போது இளைய அருணா வரை திமுகவை வட சென்னையில் வளர்க்கிறார்கள். ஆனால் பாஜக தலைவர்கள் பார்த்தால் நடிகைகளை வைத்துக்கொண்டு கட்சியை வளர்க்க பார்க்கிறார்கள். இந்த இடத்தில் அமித்ஷாவின் தலையை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார் சைதை சாதிக்.
இந்த வீடியோ வைரலாகி திமுக நிர்வாகியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
அவ ,இவ என்று பாஜகவில் இருக்கும் நடிகைகளை ஒருமையில் பேசி இருக்கிறார் திமுக நிர்வாகி . அதுவும் அமைச்சரின் முன்னிலையில் மேடையில் இப்படி ஒருவர் பேசுவதை அந்த அமைச்சரும் ரசித்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதைக்கண்டு கொதித்தெழுந்த குஷ்பு, பெண்களை ஆண்கள் தவறாக பேசுவது அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தினையும், அவர்கள் வளர்ந்த மோசமான சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இது போன்ற ஆண்கள் தங்களை கலைஞரை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றார்கள் . முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாடலா? என்று கேட்டிருந்தார் .
இதற்கு கனிமொழி எம்பி, ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . இதை யார் செய்தாலும் சொன்ன இடம், அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் எக்காரணத்தைக் கொண்டும் இது சகித்துக் கொள்ள முடியாதது . இதற்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க முடிகிறது. ஏனென்றால் எனது தலைவர் மு .க. ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒருபோதும் ஏற்புடையது இல்லை என்று தெரிவித்திருந்தார்.