×

துரை வைகோ செயலால் விரக்தி- காஞ்சி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

 

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செயலை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1993 ஆம் ஆண்டு வைகோ எனும் வை.கோபால்சாமி தனது ஆதரவாளருடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியினை துவக்கி அதற்கான கொடியினை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சியுடன் கூட்டணி இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வந்தார். தற்போது தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது மகனான துரை வைகோவை  தலைமை கழக நிலையை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவரது செயல்பாடு, பேச்சுகள் பல்வேறு மூத்த நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட மதிமுக கூட்டத்தில் பேசிய துரை வைகோ, “வருங்காலங்களில் இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம். இதில் விருப்பமில்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது என கூறியது மிகுந்த சர்ச்சையானது” என பேசியிருந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி தனது முகநூல் பக்கத்தில் தான் கடந்த 28 ஆண்டு காலமாக மதிமுகவில் நீடித்து வருவதால் இனி வரும் காலங்களில் இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமை கழகத்திற்கு தெரிவித்து இருந்தார். இதற்கு வைகோ உடனடியாக அலைபேசியில் பேசி பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டு மதிமுக வலை பக்கத்தில் அவர் பதவியை நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மாநில துணை பொதுச் செயலாளர் மு. ராஜேந்திரன் என்பவர் இதற்கு எதிர் பதிலை  கண்ணிய குறைவாக பதிவு செய்வதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள்,  நகரம் , காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள் ,  பொதுக்குழு உறுப்பினர்கள் என 28 பேர் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாக தெரிவித்தனர். மதிமுகவின் முக்கிய செயல் மாவட்டமாக காஞ்சிபுரம் விளங்கிய நிலையில் இந்த ராஜினாமா சற்று மதிமுகவிற்கு காஞ்சியில்  பின்னடைவு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.