×

சசிகலாவுக்கு எப்படி பொறுப்பு கொடுத்து நீக்கினோமோ அதுபோலதான் ஓபிஎஸ் - கடம்பூர் ராஜூ
 

 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும்  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை வேண்டும் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கட்சியில் மாற்றம்  வர வேண்டும் என ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒற்றை தலைமை தான் வேண்டும் என கருத்துக் கூறி இருந்தோம். அதிமுக என்றுமே ஒற்றை தலைமையில் தான் இருந்து வந்ததுள்ளது  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு ஏற்பட்ட சூழ்நிலையின் காரணமாக அன்று தற்காலிகமாக பொதுக்குழுவில் இரண்டு தலைமையின் கீழ் இயங்கும் என செயல்பட்டு வந்தோம். ஆனால் இன்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் இன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் அதிக வாக்கு வங்கியுடன் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒற்றைத்  தலைமையில் தான்  செயல்பட்டு வருகிறது. தலைமை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதனால் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஒரு தலைமையின் கீழ் வரவேண்டும் என பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றனர். ஜனநாயக கருத்து கூறுகிறார். இன்று இங்கு நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும்  கலந்துகொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைவருமே  ஒத்த தலைமையைதான் விரும்புகின்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானமான வந்தால் அதற்கு ஆதரவு தெரிவிக்கப்படும், இனி ஒற்றை தலைமை தான் சரியான தீர்வு என ஏற்கனவே மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கூறி விட்டோம், ஒற்றை தலைமை வந்தால் தான் காக்க முடியும் பெரிய இயக்கத்தை நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை. 

பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு 30 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே ஒற்றைத் தலைமையை விரும்புகின்றனர். பொதுக்குழுவுக்கு அனைத்து அதிகாரம் இருப்பது  ஒருங்கிணைப்பாளருக்கு நன்றாகவே தெரியும். எம்ஜிஆர் காலத்தில் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதுதான் இறுதி முடிவு. 

அதிமுகாவில் முன்னாள் ஜெயலிதா மறைவிற்கு பின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தோம். அதனை பொதுக்குழு தான் ஏற்றுக் கொண்டது, அதில் மாறுபட்ட கருத்து இல்லை. பின்னர் அவர் சிறை தண்டனை பெற்றதும், அவர் அந்த பதவியில் நீடிக்க முடியாது என்ற நிலை வரும்போது அதே பொதுக்குழு தான் சசிகலாவை பொதுக்குழு கூடி பொதுச்செயலாளர் இல்லை என்பதை தீர்மானம் நிறைவேற்றினோம். பின்னர் கால சூழ்நிலை ஏற்று  இரட்டை தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போது என்ன பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வருகிறார்களோ அது தான் இறுதியான முடிவு. தீர்மானம் நிறைவேற்றும். எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தற்போது சசிகலா அதிமுக கட்சியில் இல்லை அவரை ஓபிஎஸ் சந்திக்க மாட்டார் என நினைக்கிறோம். அவர் சந்தித்தாலும் அது அதிமுகவை பாதிக்காது” எனக் கூறினார்.