குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றப்பட்ட ஜோதிமணி -வைரலாகும் வீடியோ
டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜோதிமணி எம்பி குண்டுகட்டாக கைதாகி இருக்கிறார். கடந்த முறை நடந்த போராட்டத்திலும் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றப்பட்டார் ஜோதிமணி எம்.பி. அப்போது அவரது ஆடை கிழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடந்த போராட்டத்திலும் அவர் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றப்பட்டிருக்கிறார்.
விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை இன்று நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர் .
டெல்லியில் நடந்த போராட்டத்தில் தமிழக கரூர் எம்பி ஜோதிமணி பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் . கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றினார்கள்.
வேனில் ஏற ஜோதிமணி எம்பி மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அவரை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கி போலீசார் வேனில் ஏற்றினார்கள். இது குறித்த வீடியோ காங்கிரஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது .
இந்த வீடியோவை தனது பக்கத்திலும் பகிர்ந்த ஜோதிமணி எம்பி, ‘’இரக்கமற்று மக்களை சித்திரவதை செய்யும் மோடியின் கொடுங்கோன்மை ஆட்சியில், விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பின்மை,ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் எங்கள் மீதான டெல்லி காவல்துறையின் அடக்குமுறை. அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். மக்களுக்காகக் களம் காண்போம்’’என்று பதிவிட்டு இருக்கிறார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தியை அமலாக்கத்துறை விசாரணை செய்ததை கண்டித்து டெல்லியி போராட்டம் நடத்தியபோதும் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றப்பட்டிருந்தார் ஜோதிமணி. அப்போது அவரது ஆடை கிழிக்கப்பட்டதால் அவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
கரூரில் நடக்கும் போராட்டங்களின்போதும் ஜோதிமணியை குண்டுகட்டாகத்தான் தூக்கி வேனில் ஏற்றி இருக்கிறார்கள் போலீசார்.