×

ஆவேசப்பட்ட அதிமுகவினர் - அசால்ட் செய்த சசிகலா

 

 கடந்த ஒரு வாரமாகவே சசிகலா ஆதரவாளர்களாளும் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களாலும் விழுப்புரம் மாவட்டம் பெரும் பரபரப்பில் இருந்து வந்தது.  நேற்று மாலை அந்த பரபரப்பு உச்சத்தில் இருந்தது.  

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவரும் அதிமுக பேரவை மாவட்ட துணைச் செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளருமான ஷெரீப் தலைமையில் அதிமுகவினர் சிலர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தின்போது சசிகலாவை சந்தித்து அவரது அணியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்தநிலையில் திண்டிவனத்தில் ஷெரீப் மகள் திருமணம் நேற்று நாலாம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற்றதால் சசிகலா அதற்கு வருகை தந்துள்ளார்.  அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக கடந்த ஒரு வாரமாகவே சசிகலா ஆதரவாளர்களுக்கும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே  பிரச்சனை இருந்து வந்தது.

 சசிகலா,  ஷெரீப் மகள் திருமணத்திற்ல் பங்கேற்று விட்டு அதன் பின்னர் தனியார் ஓட்டலில் தங்கியிருந்து கட்சியினரை சந்திப்பதாக திட்டம்.  அப்படியேதான் நேற்றும் நடந்தது. 

 இதற்கு முன் கூட்டியே ஷெரீப் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தபோது சசிகலா தரப்பினர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று  சண்முகத்தின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  ஆனால் சசிகலா ஆதரவாளர்கள் அதிமுக கொடி ,தோரணங்கள்,  அதிமுக கொடியை வைத்த அலங்கார வளைவுகள் என்று சசிகலாவிற்கு தடபுடல் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.  இதனால் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் திண்டிவனம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக கொடிகளை பயன்படுத்த கூடாது என்று புகார் அளித்தனர் . அதேநேரம் அதிமுக கொடிகளை சசிகலாவை வரவேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று எதிர்தரப்பினர் மனு அளித்தனர்.  கடைசியில் அதிமுக கொடிகளை பயன்படுத்த கூடாது என்பதற்கான எந்தவித தடையும் இல்லை எனச் சொல்லி ஆவணங்களையும் போலீசார் வழங்கினர்.

 இதையடுத்து திண்டிவனம் நகரம் எங்கிலும் அதிமுக கொடியை கட்டியிருந்தனர் சசிகலா ஆதரவாளர்கள்.  இது ஒருபுறம் சிவி சண்முகத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தி இருந்த நிலையில்,   சசிகலாவின் இந்த தடபுடல்  வருகை தனக்கு பாதகமாக அமையும் என்று நினைத்தவர்,  அவரது ஆதரவாளர்கள் மூலம் அதை தடுக்க முயன்றிருக்கிறார்.  

 சசிகலாவுக்காக வைக்கப்பட்ட கொடிகளையும் அலங்கார வளைவுகளையும் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்திருக்கிறார்கள்.   இதனால் ஆத்திரமடைந்த சசிகலா ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளார்கள்.  பின்னர் போலீசார் வந்து அவர்களை சமாதானம் பேசி சாலை மறியலை கைவிட வைத்தனர். 

 இந்த அளவிற்கு சசிகலாவிற்கு வரவேற்பு அளிக்கப்படும் என்று கொஞ்சம்கூட எதிர்பார்த்திராத சி.வி. சண்முகமும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

 திட்டமிட்டபடியே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா அதன் பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் தங்கி கட்சியினரை, ஆதரவாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.  சசிகலாவின் வருகையின்போது அதிமுக கொடியை அகற்று என்று அதிமுகவினர் சத்தம் போட்டிருக்கிறார்கள்.  அதை சசிகலா கண்டுகொள்ளவே இல்லை.  அதை காதில் வாங்காதது போல் அசால்ட் செய்துவிட்டு போயிருக்கிறார்.  

 சசிகலா ஆதரவாளர்கள் , சி.வி. சண்முகம் ஆதரவாளர்களால் நடந்த இந்த மோதல் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.