கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள் - பாஜகவை அலறவிட்ட பெண் எம்.பி.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று பாஜகவை கடுமையாக விமர்சித்து இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பாஜகவை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள். நான் இன்று மாலையில் பேசுகிறேன் என்று கடுமையாக சவால் விடுத்து இருக்கிறார் மஹுவா மொய்த்ரா. மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் , காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேசியபோது ஏழைகளுக்கு ஒரு இந்தியா பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.
தமிழகத்தில் உங்களால் ஒருநாளும் ஆள முடியாது என்று பாஜகவை மேலும் கடுமையாக பேசி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் . ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள், அமெரிக்க செய்தி தொடர்பாளர் என பலரும் எதிரிவினையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பாஜகவினருக்கு சவால் விடுத்து இருக்கிறார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று மாலை நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் போது பேசுகிறேன். பாஜகவினர் கற்பனை கதைகளை கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையை தயாராக வைத்துக்கொள்ளுங்கள் . வேண்டுமென்றால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த டுவிட்டர் பதிவுக்கு ஆதரவுகள் ஒருபக்கம் குவிந்து வர பாஜகவினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.