×

2017-ல் நிர்மலா சீதாராமன் கார் மீது திமுகவினர் கல் எறிந்தனர்- அண்ணாமலை

 

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீலகிரி எம்பி ராஜா மற்றும் முதல்வர் ஆகியோர் பிரிவினைவாதத்தை பற்றி பேசியதை நாடு முழுவதும் பொதுமக்கள் பார்த்தனர். முதலமைச்சர் திடீரென தேசபக்தி பற்றி பேசுவது வியப்பு அளிக்கிறது. இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை பாஜக ஆளாத அரசு கூட வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது தமிழக அரசு ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார். பாஜகவிற்கு திடீரென தேச பக்தி வந்திருக்கிறது என முதல்வர் குற்றம் சாட்டுகிறார். பாஜகவின் உடைய குற்றச்சாட்டு திமுகவிற்கு தேச பக்தி கிடையாது என்பது முதல்வர் கண்ணாடி சுவருக்குள் உட்கார்ந்து கல் எறிவது போன்று இன்னொருவர் மீது எறிவது முன்பு அவர் கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து இருக்கிறார் என்பதை உணர வேண்டும். 

பாஜக இதுவரை எந்த ஒரு சிலைகளையும் சேதப்படுத்தவில்லை, பாஜக மாநிலத் துணைத் தலைவர் இராமலிங்கம் தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் பாரத அன்னை என்ற ஆலயம் உருவாக்கியுள்ளார். அனுமதி பெற்று ஊர்வலமாக பாரத அன்னைக்கு மரியாதை செலுத்துவதற்காக சென்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்ற பிறகு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்ததால் அங்கே கூடியிருந்த தொண்டர்கள் பூட்டை உடைத்து விட்டு உள்ளே சென்றனர். அனுமதி  மறுக்கப்பட்டு இருந்தால் பாஜகவினர் உள்ளே சென்றிருக்க மாட்டார்கள். திமுகவினர் அனுமதி கொடுத்துவிட்டு பாஜகவை கூட்டத்தை கண்டு திமுகவினர் அச்சப்படுவர். நேற்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு பாஜக சார்பில் அனுமதி பெற்று கலந்து கொண்டேன் கைது செய்யப்பட்ட கேபி ராமலிங்கம் அண்ணனுக்கு இது புதிது அல்ல. இது போன்ற கைதுகளுக்கு பாரதிய ஜனதா கட்சி அஞ்சப் போவதில்லை” எனக் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தத்தின் காரணமாகத்தான் பாஜகவில் சேர்ந்தேன் என சரவணன் கூறியது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலைத்த அவர், இது குறித்து எனக்கு தெரியாது யார் தலைமை யார் அழுத்தம் கொடுத்தார்கள்? யார் அதை செய்ய சொன்னார்கள் என்பது எனக்கு தெரியாது, இது பற்றி சரவணன் தான் சொல்ல வேண்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கட்டும். முன்னாள் மதுரை பாஜக மாவட்ட தலைவர் கட்சியை விட்டு சென்ற பிறகு அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவர் தேர்ந்தெடுத்த பாதை ஒன்றும் புதிதல்ல அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள் என்றார். 

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “2017 ஆம் ஆண்டு ராமநாதபுரத்திற்கு நிர்மலா சீதாராமன், தேசியக்கொடி பொருத்தப்பட்ட காரில் வருகை தரும் பொழுது திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் காரில் கல்லை எறிந்தார்கள். அப்போது திமுக என்ன கூறினார்கள் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். பாஜகவினரின் நேற்று செய்த செயலால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அரசியல் கட்சிகளில் தலைவர் சரியான வழியில் நடக்காத போது குறிப்பாக நேற்று நிதியமைச்சர் சரியாக நடக்காத போது தொண்டர்களுக்கு உணர்ச்சிகள் வரத்தான் செய்யும். தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது தலைவருக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்தவர். தொண்டர்களுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தவறினார்கள் நேற்று அதுதான் நடந்தது. இதனால் பாஜக சார்பில் தொண்டர்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது அவர்களது தவறுகளை திருத்திக் கொள்ள இது ஒரு பாடம்” எனக் கூறினார்.