×

எங்களுடைய ஆட்சி தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது; கூட்டணி ஆட்சிதான்- அன்புமணி ராமதாஸ்

 

வருங்காலத்தில் அரசியலில் சூழ்நிலை மாறும், அதற்கேற்றார் போல் தங்கள் அரசியல் பயணமும் இருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த அடிப்படையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டு அரசியலில் விஜயகாந்த் தைரியமாக மக்களை திரட்டி அரசியல் செய்து வருகிறார். அதனடிப்படையில் அவரை சந்தித்தித்தேன். இது நட்பு ரீதியான ஒரு சந்திப்பு, அவர் மீது தனிப்பட்ட மரியாதை தனக்கு உள்ளது. மேலும் வருங்காலத்தில் அரசியலில் சூழ்நிலை மாறும், அதற்கேற்றார் போல் எங்கள் அரசியல் பயணமும் இருக்கும். யுபிஎஸ்சி தேர்வில் தமிழக தேர்வர்கள் குறைவாகவே தேர்ச்சி பெற்றிருப்பது, தமிழ்நாட்டில் உள்ள கல்வி தரம் மேலும் உயர வேண்டும் என்பதை காட்டுகிறது. பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது கல்வியின் அடித்தளமே சரியாக இல்லை, நீட் தேர்வில் நம்பிக்கை இல்லாததால்தான் தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. போட்டி போடுகின்ற தன்மை மாணவர்களிடம் இல்லாத சூழல் உள்ளது. கல்வி வணிகமாக மாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தரமான கல்வியையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

அதேபோல் 2026 தான் தங்களுடைய இலக்கு. எங்களுடைய ஆட்சி தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது, கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும். எங்கள் கொள்கையுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். அதேபோன்று, 2024 நாடாளுமன்ற தேர்தலும், 2026 தேர்தலுக்கான யுக்திகளை வகுக்கும் வகையில் முடிவு எடுப்போம்” என்று கூறினார்