×

அதிமுகவை அடக்கி விட முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

 

ரெய்டுகளை நடத்தி அதிமுகவை அடக்கிவிட முடியாது, இதற்கு எல்லாம் வரக்கூடிய நாடாளுமன்ற , சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதில் எல்லாம் அரசு கவனம் செலுத்தாமல், முன்னாள் அமைச்சர்கள் இல்லத்தில் ரெய்டு நடத்திவருகிறது. முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றாமல், பெயருக்கு நான்கு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு தன்னை விளம்பரம் படுத்திக்கொள்வதில் தான் முதல்வர் கவனம் செலுத்துகிறார்.

முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்லத்தில் ரெய்டு நடத்துவதன் மூலம் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கலாம் என சூழ்ச்சி செய்கிறது. இது போன்ற பல அடக்குமுறைகளை தாண்டி புடம் போட்ட தங்கமாக அதிமுக வளர்ந்துள்ளது. இதற்கெல்லாம் வரும் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்தார்