×

24 மணி நேரமாச்சு;  இன்னமும் ஏன் எம்.எல்.ஏ. பழனியாண்டியை குற்றவாளி என சொல்லல?

 


ஆளுங்கட்சியே சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  அமைச்சர் கே .என். நேருவின் ஆதரவாளர்களும் திருச்சி சிவா எம். பி யின் ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது. 

 திமுக எம்பி திருச்சி சிவா வீடு அமைந்திருக்கும் எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது . விழா அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் சிவா எம்பியின் பெயர் இடம் பெறவில்லை.  இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது ஆதரவாளர்கள் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு விழாவுக்கு சென்றபோது சிவா வீடு வழியாக சென்றபோது அவரது ஆதரவாளர்கள் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டினர்.  இதில் ஆவேசமடைந்த அமைச்சர் ஆதரவாளர்கள் சிவா எம்பி ஆதரவாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டு இருக்கிறார்கள். 

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு திருச்சி நீதிமன்ற போலீசார் சிவா எம்பியின்  வீட்டிற்குள் இருந்த சிவா எம்பியின் ஆதரவாளர்கள் சிலரை அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டியதாக சொல்லி கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து கொண்டிருந்தார்கள்.   இதை அறிந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், விஜய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்கு உள்ளேயே புகுந்து அங்கு பணியில் இருந்த பெண் போலீசை தாக்கி விட்டு காவல் நிலையத்தில் இருந்த நாற்காலிகளை தூக்கி சிவா  ஆதரவாளர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினார்கள்.

 காவல் நிலையத்திற்கு உள்ளேயே புகுந்து அமைச்சர் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது திருச்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

இந்த சம்பவத்திற்கு பின்னர் அமைச்சர் நேருவை  முதல்வர் தொடர்பு கொண்டு என் நிம்மதியை ஏன் எடுக்கிறீர்கள் என்று கோபமாக சீறி இருக்கிறார் . ஆனால் இதற்கு நேரு  எனக்கு கெட்ட பெயர் எடுத்து ஏற்படுத்தும் நோக்கில் செய்கிறார்கள்.  அவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்ல,  திமுக தலைமை நான்கு பேரை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

 சிவா எம் பி ன் மருமகன் முத்துக்குமார்,  உள்ளூர் எம்பியை அமைச்சர் நேருவும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.  வீட்டின் அருகே நடக்கும் நிகழ்ச்சிக்கு கூட அழைப்பு இல்லை .   அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டிலும் பெயர் போடவில்லை . பெயர் போடாமல் அவமானப்படுத்துகிறார்கள்.  திமுகவின் மூத்த நிர்வாகியை இப்படி அவமானப்படுத்துகிறார்கள்.  நேருவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இதுபோன்று அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று குமுறி இருக்கிறார். 

 அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ஆனால் இந்த தாக்குதலின் போது முன் நின்று எல்லாவற்றையும் செய்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இந்த தாக்குதலுக்கு சாட்சியா அல்லது அவரும் குற்றவாளியா? 24 மணிநேரம் ஆகியிஉம் இன்னும் ஏன் திருச்சி காவல்துறை அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கவில்லை  என்று கேள்வி எழுப்பு இருக்கிறார் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப மூத்த நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார்.

’’24 மணி நேரமாச்சு இன்னமும் இந்த MLA பழனியாண்டி விட்னஸா இல்ல அக்யூஸ்டா சொல்லலாமே தமிழ்நாடு போலீஸ்?’’என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.