×

என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய ஜெ., உதவியாளரின் மனக்குமுறல்

என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல் அதிமுகவில் சலசலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், தற்போதைய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் சசிகலா விவகாரத்தில் சொன்ன கருத்துக்களும், அதிமுகவும் அமமுகவும் இணைய வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னதும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பூங்குன்றன் சங்கரலிங்கம் சொன்னதும் சலசலப்புக்கும் அதிமுகவுக்கும் பஞ்சம் இல்லை என்றாகிவிட்டது. பொறுத்தம் போதும் என்று பொங்கல் தினத்தில்
 

என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல் அதிமுகவில் சலசலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், தற்போதைய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் சசிகலா விவகாரத்தில் சொன்ன கருத்துக்களும், அதிமுகவும் அமமுகவும் இணைய வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னதும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பூங்குன்றன் சங்கரலிங்கம் சொன்னதும் சலசலப்புக்கும் அதிமுகவுக்கும் பஞ்சம் இல்லை என்றாகிவிட்டது.

பொறுத்தம் போதும் என்று பொங்கல் தினத்தில் பொங்கிவிட்டார் பூங்குன்றன். தனது குமுறலை முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதால் சலசலப்பை மட்டுமல்லாது, தேர்தல் நேரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பூங்குன்றன் அந்த பதிவில், ‘’என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் விசுவாசம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. இது ஆட்சி அம்மாவின் ஆட்சி. இதில் உரிமை கொண்டாடுவதில் யாருக்கும் பெருமையுமில்லை. அம்மா அவர்கள் கஷ்டப்பட்டு பெற்று தந்த ஆட்சிக்கு என்னால் ஒரு களங்கம் வரக்கூடாது என்பதால் மௌனம் காத்தேன்…..’’என்கிறார். அப்படியென்றால் இனி மவுனம் காக்க மாட்டேன் என்பதைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிடுகிறார்.

மேலும், ‘’ தை பிறந்து விட்டது. தேர்தலும் நெருங்கிவிட்டது. சிலரின் பேச்சும், விமர்சனங்களும் என் மனதை பெரிதும் பாதித்து வந்தன. அதற்காகவே இந்த மனக்குமுறல்’’ என்கிறார்.

’’அம்மா அவர்கள் ஆசையோடு எனக்கு வாங்கித் தந்த காரை நிறுத்திவிட்டார்கள். ஏன் நிறுத்தினீர்கள் என்று இன்றுவரை கேட்டிருப்பேனா?
கட்சியின் சொத்துக்களான அறக்கட்டளைகள் மூன்றிலும் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு நான் மட்டுமே நிர்வாகி. நான் என்றாவது இதைப் பற்றி பேசி இருப்பேனா? அதை மாற்றிக் கொடுத்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்றுச் சொன்னார்கள். இதைப் பற்றி என்றாவது வெளியில் சொல்லி இருப்பேனா? அறக்கட்டளை என்னுடையது என்று சொந்தம் கொண்டாடினேனா? ’’ என்றும்,

’’தொண்டர்களின் உணர்வுகளைப் பதிவிடும் போது தலைவர்கள் கோபமாக இருக்கிறார்கள். எதாவது செய்து விடப் போகிறார்கள். வெளியில் செல்லும் போது கவனமாக செல்லுங்கள் என்றார்கள். இதுபற்றி நான் யாரிடமாவது விவாதித்தது உண்டா?’’ என்றும் கேள்வி எழுப்பிய பூங்குன்றன், ’’தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் நீண்ட நாட்களாகப் பேட்டி கேட்டு வருகிறார்கள். என் பேட்டி கட்சிக்கோ, மற்றவர்களுக்கோ எந்த விதத்திலும் சங்கடத்தை தந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவிர்த்து வருகிறேன்’’என்கிறார்.

’எல்லாவற்றையும் அவன் பெயரில் மாற்றுங்கள். அவன் ஒருவனே என் நம்பிக்கைக்குரியவன்’ என்று அம்மா அவர்கள் சொன்னதை இதுவரை பெருமையாக சொல்லி இருப்பேனா? போயஸ் கார்டன் வீட்டின் சொத்துவரிக்கான படிவத்தில் அம்மா அவர்களுக்கான இடத்தில் என்னை கையெழுத்திட சொன்ன நம்பிக்கை பெற்றவன் நான். அதுவே என் ஆனந்தம். அதுவே என் வெற்றி. அதுவே எனக்குப் போதும் என்று சொல்லும் பூங்குன்றன்,

’’மூன்று முறை கழக உறுப்பினர் உரிமை சீட்டிற்கு விண்ணப்பித்த போது என்னுடைய படிவத்தை மட்டும் வாங்க மறுத்தீர்களே, அதைத் தட்டிக் கேட்டேனா? மற்றவர்களுக்கு தெரிவித்தேனா? உங்களுக்கு தராமல் என் பெயரில் கட்சியின் அறக்கட்டளைகளை அம்மா தந்திருப்பதால் நான் தான் அம்மாவின் வாரிசு என்று அறிவித்தேனா?’’ என்று கேள்விகளை அடுக்குகிறார்.

’’யாருக்கும் என்னால் எந்த சங்கடமும் வரக்கூடாது என்பதற்காக கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருக்கும் என்னை பார்த்து ஏளனம் பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது’’ என்று கேட்கும் பூங்குன்றன், ‘’ஏதோ ஒரு வகையில் என்னிடம் உதவி பெற்றிருப்பீர்கள். நமக்கு உதவியவன் இவன் என்று என்றாவது அழைத்து ஆறுதல் சொல்லி இருப்பீர்களா? இன்னுமா புரியவில்லை என் விசுவாசம். இதற்குமேல் எப்படி கழகத்திற்கு விசுவாசமாக செயல்படுவது என்று எனக்கும் புரியவில்லை. சொல்லித்தாருங்கள். அம்மாவே இல்லை என்று ஆன பிறகு சொத்துக்கள் எதற்கு? சொத்திலும் ஆசை இல்லை. கட்சியிலும் ஆசை இல்லை’’என்று சொல்லுபவர், .

’’தலைமையில் இருப்பவர் கட்சியை வலிமையாக நடத்த வேண்டும். அதுவே என் ஆசை, வேண்டுதல். தலைவராக யாரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு உண்டு. நீங்கள் நலமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு, யாரிடமும் செல்லாமல் இன்று நிற்கதியாய் நிற்கும் என்னை நிம்மதியாக வாழவிடுங்கள். ஒற்றுமையாய் இருங்கள். கழகத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். இதுவே நீங்கள் எனக்கு செய்யும் மாபெரும் உதவி. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்’’என்றிருக்கிறார்.

அம்மாவின் நம்பிக்கை பெற்றதே இந்த ஜென்மத்தில் நான் பெறவெண்டியதை பெற்ற திருப்தி. கடவுளான அம்மாவிற்கு தெரியும் என் விசுவாசம். என்றும் அந்த உண்மை விசுவாசத்தோடு என் தாயின் வழியில்.. என்று முடித்திருக்கிறார்.