தண்ணீரை கண்டால் பயம்; விடுபட என்ன வழி? வாசகரின் கேள்விக்கு உளவியலாளர் குமரன் குமணன் பதில்
உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends
சென்னை: உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அனைவருக்கும் பெரிய தலைவலியாக இருக்கும் உளவியல் பிரச்னையை தீர்ப்பதற்காக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் ‘ஒரு தீர்வு சொல்லட்டா #Friends’ என்ற வாசகர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் உளவியலாளர் குமரன் குமணன் வாரா வாரம் வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலும் பின்வருமாறு:-
கேள்வி: தண்ணீரை எந்த வடிவத்தில் கண்டாலும் பயமாக உள்ளது. இதில் இருந்து விடுபட எதாவது வழி சொல்லுங்களேன்.
பதில் : உங்கள் நிலையை மட்டும் குறிப்பிட்ட நீங்கள் ,அது எப்போது தொடங்கியது என்றும் அதனால் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன என்று தெளிவாக பட்டியலிட்டுக் கூற வேண்டிய தேவை உருவாகியுள்ளளதாக கருதுகின்றேன். அதனால் உடனடியாக ஒரு மன நல மருத்துவரையோ ,உளவியல் ஆலோசகரையோ நேருக்கு நேர் சந்தித்து உங்கள் நிலையை தெளிவுபடுத்தி தீர்வை நோக்கி நகருங்கள் .என்னிடமே நீங்கள் வர விரும்புவீர்கள் எனில் ,என்னை தொடர்பு கொள்ள அத்தனை வழிகளும் இந்த பதிவு இடம்பெறும் இணையதள பக்கத்திலேயே உள்ளது. நானும் தனிப்பட்ட முறையில் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.
பயம் என்பதே பொதுவாக எந்த ஓரு விஷயத்திலிருந்தோ இடத்திலிருந்தோ நாம் விலகி இருப்பதால் ஏற்படுவதுதான் என்பது என் எண்ணம் . அச்சுறுத்தும் விஷயத்துக்கும் அச்சம் கொள்ளும் நபருக்குமான இடைவெளியை படிப்படியாக குறைத்து ,இறுதியாக அந்த உணர்விலிருந்தே அந்த நபரை வெளிக்கொண்டு வரக்கூடிய சிகிச்சை முறைகள் உள்ளன .ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் சிகிச்சையின் ஒவ்வொரு கட்டமும் முழுமை பெற ,அனுபவமிக்க நிபுணர் ஒருவரின் நேரடி கண்காணிப்பு அவசியம் .அப்படிப்பட்ட ஓரு நபரிடம் எவ்வளவு சீக்கிரம் சென்றடைந்தது விடுகிறீர்களோ அவ்வளவு நன்மையும் உங்களுக்கே …. வாழ்த்துகள் ..வெல்வோம் .