பித்தம் அதிகமானால் வரும் லிவர் பாதிப்புக்கு, பாதுகாப்பு தரும் இந்த கீரையை இப்படி சாப்பிடணும்
அகத்தி – அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என அழைக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக்கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர மிகச் சிறந்த பலன்களைத் தரும். அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருள்படும். இது நமது அகத்தின் தீயை அகற்றுவதால் அதை அகத்தி என அழைக்கின்றனர்.
அகத்தி கீரை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது. மலச்சிக்கலை போக்கும். காய்ச்சலை தணிக்கும் தன்மை கொண்டது. அகத்தி பூக்கள் வெண்மை நிறம் கொண்டவை. கார்த்திகை முதல் மாசி மாதம் வரை இந்த பூக்கள் கிடைக்கும்.
அகத்தி பூக்களை பயன்படுத்தி வெயிலால் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் காபி, டீ அதிகம் குடிப்பதனால் ஏற்படும் பித்தம் ஆகியவற்றை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். அகத்தி பூக்கள் 3 எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, அரை ஸ்பூன் சோம்பு ஆகியவை சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி பருகலாம். இந்த தேனீரை வாரம் ஒருமுறை குடித்துவர பித்தம் குறைந்து வெப்பம் தணியும்.
அகத்தியில் கால்சியம் அதிகளவில் உள்ளது. வைட்டமின் சி, பாஸ்பரஸ், நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறது. இரும்பு சத்து அதிகம் உள்ள அகத்தி, வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம், தோல் பிரச்னை, பித்தத்தால் ஏற்படும் பிரச்னை ஆகியவற்றை போக்குகிறது. காய்ச்சலை தணிக்கிறது. உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும் தன்மை கொண்டது. அகத்தி கீரையை அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியம் ஏற்படும். இதை அளவுக்கு அதிமாக பயன்படுத்த கூடாது.
அகத்தி வேரை பயன்படுத்தி உடல், கை கால் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பிடி அளவு வேரை சுத்தப்படுத்தி எடுக்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர உள்ளங்கை, கால் எரிச்சல் மற்றும் உடலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். கண் எரிச்சல் குணமாகும். இதை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம்.
அகத்தியானது உடல் வெப்பத்தை சமப்படுத்தும் உன்னதமான உணவு. வயிற்று கிருமிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. பித்த சமனியாக விளங்குகிறது. அகத்தி கீரையை பயன்படுத்தி இளநரையை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கீரையை பசையாக்கி வைத்துக்கொள்ளவும். கிச்சிலி கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி பண்ணி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பங்கு கீரை பசை, 2 பங்கு நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். சிறிது கிச்சிலி கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் பொடி கலவையை சேர்க்கவும். பின்னர், ஆற வைத்து வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும். இதை வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு இருக்காது. இளநரை வராது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்
அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும்.
பூவைச் சமைத்து உண்டு வர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த ஒரு மாதத்தில் இருமல் குறையும்.அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு – அதே அளவு தேன் கலந்து உண்டு வர வயிற்று வலி நீங்கும்.
அகத்தி கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்பட்டை, தேமல், சொரி, சிரங்கு உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் முழுமையாக குணமடையும்.
அகத்திக்கீரை, மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றையும் சமஅளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.