×

ஓவரா பிரியாணி சாப்பிடுறவங்களை ஓரம் கட்ட காத்திருக்கும் பிரச்சினைகள் .

 

பிரியாணி என்று கூறும் பொழுதே அதன் நிறம், மணம், சுவை பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது. பிறந்தநாள்  முதல், இறப்பு சம்பவம் வரை ‘பிரியாணி விருந்து’ போடுவது நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துவிட்டது. இப்போதெல்லாம் ‘பிரியாணி’ இல்லாத கொண்டாட்டமே இல்லை.

பிரியாணி எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவோ அதே அளவிற்கு ஆரோக்கியத்தை கெடுக்கவும் கூடியது. எல்லாம் நாம் சாப்பிடும் அளவை பொறுத்துதான் இருக்கிறது. தினமும் பிரியாணி சாப்பிடுவது பல ஆரோக்கிய சீர்கேடுகளை உண்டாக்கும்.

 

நல்ல கொழுக்களை போல சில தீய கொழுப்புகளும் பிரியாணியில் இருக்கத்தான் செய்கிறது. பிரியாணி சாப்பிட்டவுடன் மூலிகை தேநீர் அல்லது எலுமிச்சை தேநீர் குடிப்பது நல்லது. இது பிரியாணியில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது, இதன் மூலம் கல்லீரல் பாதுகாக்கப்படும்.

இரவு நேரத்தில் நமது உடலில் மெட்டபாலிசம் குறைவாக இருப்பதால் பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தொடர்ச்சியாக இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீர்குலைந்து போய்விடும். பிறகு குடல் அலர்ஜி, இரைப்பை புண், இரப்பை அழற்சி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

மாலை 6 மணிக்கு மேல் கலோரி அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் அது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

இரவு நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிடுவதால் அது தூக்கத்தை கெடுக்கிறது. இதனால் மறுநாள் காலையில் உங்களுக்கு சோர்வை உருவாக்கும்.

நம்மில் பலர் பிரியாணியை வயிறுபுடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று சாப்பிடாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.

உடல் பருமன் 

பிரியாணியை நம்மில் பலர்   அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.

சர்க்கரை அளவு 

நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு பொருள்கள்  அல்லது ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதய நோய் 

கடைகளில் தயாரிக்கும் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்களுக்கு இதய நோய் வரக் காரணமாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.