‘சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு இறுதியானது அல்ல’ : உச்ச நீதிமன்றம்
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம்
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வரலாறு காணாத தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
மனுக்கள் மீதான தீர்ப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்ட அமர்வு, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது. மேலும் இதுகுறித்த விசாரணை நடந்து முடியும் வரை அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என்ற நிலை தொடரும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து சபரிமலைக்குக் கடந்த மாதம் சென்ற சமூக செயற்பாட்டாளர் பிந்து மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்துத் தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில், சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்தாண்டு நாங்கள் வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல. இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.