மெட்ரோவுக்காக மரங்களை வெட்டக்கூடாது – உச்சநீதிமன்றம் அதிரடி!
மெட்ரோவுக்காக மரங்களை வெட்டக்கூடாது – உச்சநீதிமன்றம் அதிரடி!
மும்பை ஆரே காலனி பகுதியில், மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மும்பையில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்றுவருகிறது. மும்பையின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் ஆரே காலனி பகுதியில் தான் இதற்கான போராட்ட களம். மரங்கள் நிறைந்த ஆரோ காலனியில், மெட்ரோ ரயில் நிலையத்திற்காக வாகன நிறுத்திடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனியில், சுமார் 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மெட்டோ ரயில் நிர்வாகத்திற்கு மும்பை மாநகராட்சி அனுமதி வழங்கியது. மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்களும், இயற்கை ஆர்வலர்களும் சட்ட போராட்டத்திலும், களப்போராட்டத்திலும் இறங்கினர்.
போராட்டம் வலுவடைந்ததால், ஆரே பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமேசான் காட்டுத் தீ குறித்து கவலையை வெளிப்படுத்திய மும்பை காவல்துறையினருக்கு, ஆரே காலனியில் மரங்கள் வெட்டும்போது அதை தடுக்க அக்கறை வரவில்லையே என்ற விமர்சனங்களை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.பசுமை போர்த்திய பகுதியாக காணப்படும் ஆரே காலனியில் மரங்களை வெட்டக்கூடாது எனக்கூறி தொடரப்பட்ட மனுக்களை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சட்டக்கல்லூரி மாணவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். இதனால் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு, ஆரே காலனியில் மரங்களை வெட்ட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆரே காலனி மரங்கள் விவகாரம் மகாராஷ்டிராவில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மரங்களா? மெட்ரோவா ? என்பதற்கான விடையும், வரும் நாட்களில் தெரியவரும்