பாலியல் தொல்லையால் பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸில் இருந்து திடீர் விலகல்; எந்த கட்சியில் இணைகிறார் தெரியுமா?
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் பிரியங்கா சதுர்வேதி. இவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே தனது ராஜினாமா கடிதத்தையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், ’10 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினால் ஈர்க்கப்பட்டு இளைஞர் காங்கிரஸில் என்னை இணைத்துக் கொண்டேன். கட்சியில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். அதில் எனது நூறு சதவிகித உழைப்பையும் கொடுத்துள்ளேன். இந்த பதவிகள் காரணமாக நானும் என் குடும்பமும் பல்வேறு மிரட்டல்களைச் சந்தித்துள்ளோம். இருப்பினும் நான் கட்சியிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த கடிதத்தில், சில வாரங்களாகக் கட்சியில் எனது சேவையும் உழைப்பும் மதிக்கப்படவில்லை. சிலர் என்னிடம் தவறாக நடக்க முயன்ற அதிர்ச்சியும், அதைக் கண்டுகொள்ளாத நிலையும் கூட ஏற்பட்டது. இதற்கு பிறகும் கட்சியில் இருப்பது கண்ணியமற்றது என்பதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா சதுர்வேதி இந்த திடீர் விலகலால் அக்கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பிரியங்கா, சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். இதை சிவசேனா கட்சியின் எம்.பி, சஞ்சய் ராவத்தும் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடி பெண்ணுக்கு ராகுல் சர்ப்ரைஸ்