ஜூலைக்கு முன் சர்வதேச விமான சேவையை தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை….
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜூலைக்கு முன் சர்வதேச விமான சேவையை மத்திய அரசு அனுமதிக்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை தடுக்க மத்திய அரசு மே 3ம் தேதி வரை 40 நாட்கள் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் கடந்த 28 நாட்களாக விமானங்கள் அனைத்தும் விமான நிலையங்களில் ஒரமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் வரும் 4ம் தேதி முதல் உள்நாட்டில் குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானங்களை இயக்கபோவதாக அறிவித்தது.
மேலும், விமான டிக்கெட் முன்பதிவையும் தொடங்கியது. ஏர் இந்தியா டிக்கெட் முன்பதிவை தொடங்கிய சில மணி நேரத்தில், விமான சேவையை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதனால் மத்திய அரசு முடிவு எடுத்தபிறகு டிக்கெட் முன்பதிவை தொடங்குமாறு விமான போக்குவரத்து அமைச்சகம் விமான நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே மத்திய அரசு சர்வதேச விமான சேவையை ஜூலை மாதத்துக்கு முன்னர் அனுமதிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் கட்டுப்பாடு அற்ற இயக்கம்தான். அதனால் சர்வதே பயணத்துக்காக வான்வழியை திறக்க மத்திய அரசு அவசரம் காட்டாது. அதேசமயம் உள்நாட்டு விமான போக்குவரத்தை அதற்கு முன் அனுமதிக்க வாய்ப்புள்ளது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.