ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க துடியா துடிக்கும் மத்திய அரசு! புது பிளான் ரெடி!
விமான சேவையில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியாவை தனியாருக்கு எப்படியாவது விற்றுவிட என்ற முனைப்பில் மத்திய அரசு உள்ளது. அதற்கு வசதியாக ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்க புது திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் தயாரித்து வருகிறது.
அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பாகத்தான் இயங்கியது. ஆனால் கண்மூடித்தனமாக வழித் தடங்களை அளித்தது, லாபகரமான வழிதடங்களை தனியாருக்கு தூக்கி கொடுத்தது, நிர்வாக செலவுகளுக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கியது போன்ற காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம் மீள முடியாத கடன் சுமையில் விழுந்தது.
இதற்கு மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தை கட்டிகிட்டு அழ முடியாது. யானையை கெட்டி தீவனம் போட்ட கதையா மாறி விடும் பேசாமல் அதனை தனியாருக்கு விற்று விடும் என்று மத்திய அரசு முடிவுக்கு வந்தது. சென்ற ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்தவொரு நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க முன்வரவில்லை. இதனையடுத்து ஏர் இந்தியா பங்கு விற்பனையை மத்திய அரசு ஒத்திவைத்தது.
ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட, பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் அடங்கிய ஏ.ஐ.எஸ்.ஏ.எம். அமைப்பிடம் தனது புதிய பிளானை மத்திய நிதி அமைச்சகம் விரைவில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.