×

யாருக்கெல்லாம் இதயநோய் ஏற்படலாம்? - மத்திய அரசு விளக்கம் 

 

கொரோனா காலத்திற்கு பின் மாரடைப்பு இளம்வயதினரை அதிகம் தாக்கிவருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உஜ்ஜைனை சேர்ந்த மகாகாலேஷ்வர் கோவிலின் உதவி பூசாரியின் மகன், ரங் பஞ்சமியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் பங்கேற்றார். சிறுவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டு சாகசம் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வாள்வெட்டு சம்பவத்தின் போது சிறுவனுக்கு சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது.

அமைதியான மாரடைப்பான இது 45% பேருக்கு ஏற்படுவதாகவும், பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்குவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் கடந்த வாரம் கரூர் மாவட்டத்தில் நடந்த கபடி போட்டியின் போது 26 வயது விளையாட்டு வீரர், போட்டிகளுக்கு நடுவே சரிந்து விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த வாரத்தில் மட்டும்  ஆந்திரா, தெலங்கானாவில் 4 இளைஞர்கள் வரை மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் யாருக்கெல்லாம் இதயநோய் ஏற்படலாம் என மத்திய அரசு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.  அதில், போதிய காய்கறிகள், பழங்களை உணவில் சேர்க்காவிடில் 98.4% பேருக்கு இதயநோய் ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களில் 41.3% பேருக்கும், புகைப்பிடிப்போரில் 32.8% பேருக்கும், மதுப்பழக்கம் உள்ளோரில் 15.9% பேருக்கும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.  மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு 1990-ல் 15.2% ஆக இருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு 28.1% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மாநிலங்களவையில் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.