×

"மன்னித்துவிடு அம்மா... நான் போகிறேன்"- வரதட்சணை கொடுமையால் ஆசிரியை தற்கொலை

 

டேராடூனில் 27 வயதான அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, உத்தரகாண்ட் தலைமைச் செயலகத்தில் தனிச் செயலாளராகப் பணிபுரியும் அவரது கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் சிருஷ்டி. இவருக்கும் உத்தரகாண்ட் தலைமைச் செயலகத்தில் தனிச் செயலாளராகப் பணிபுரியும் சௌரப் கத்ரி என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. டேராடூனிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள டோய்வாலாவி சிருஷ்டி மாமியார் வீட்டில் வசித்துவந்தார். திருமணத்திற்குப் பிறகு வரதட்சணைக் கேட்டு கணவரும், மாமியார் குடும்பத்தினரும் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி, சிருஷ்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் சிருஷ்டி கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோவில், “மன்னித்துவிடு அம்மா... நான் போகிறேன். கடந்த ஆறு மாதங்களாக இதையெல்லாம் சகித்துக்கொண்டிருந்தேன். இனி என்னால் தாங்க முடியாது. எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன்... ஆனால் இவர்கள் ஒருபோதும் மாற மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிருஷ்டியின் தாய் சீமா அளித்த புகாரின் அடிப்படையில், உத்தரகாண்ட் தலைமைச் செயலகத்தில் தனிச் செயலாளராகப் பணிபுரியும் சிருஷ்டியின் கணவர் சௌரப் கத்ரி, அவரது தாய் பர்வீனா தேவி, சகோதரி சாரு கத்ரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் சீமா கோரியுள்ளார்.