×

மீண்டும் கொரோனா கோரதாண்டவம்... மத்திய அமைச்சருக்கு பாசிட்டிவ்! 

 

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. இரண்டாம் அலையின் ஆரம்பத்தில் என்ன வேகத்தில் கொரோனா பரவியதோ அதை விட அதிவேகமாக பரவி வருகிறது. அதற்குக் காரணம் மின்னல் வேக ஒமைக்ரான் பரவல் தான். அதனுடன் டெல்டா வேரியன்டும் சேர்ந்துகொண்டதால் பாதிப்பு எண்ணிக்கை மலைக்க வைக்க கூடிய அளவிற்கு அதிகரித்துள்ளது. இரண்டாம் அலையின்போது சினிமா நடிகர்கள், கிரிக்கெட்டர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பிரபலமான நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது.

தற்போது அதேபோல பிரபலமான நபர்களுக்கு கொரோனா என்ற செய்தி அடிக்கடி வட்டமடிக்கின்றன. மகாராஷ்டிராவில் 20 எம்எல்ஏக்கள் 10 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இச்சூழலில் மத்திய உள்துறை இணை அமைச்சரான நித்யானந்த் ராய்க்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இவர் நேற்று மத்திய ஆயுதப்படை போலீஸ் (CAPF) நடத்திய விழாவில் கலந்துகொண்டிருந்தார். இதன் பிறகு லேசான அறிகுறி தென்பட்ட உடன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் தொற்று உறுதியானது. 

56 வயதான நிதியானந்த் ராய் பீகாரைச் சேர்ந்த மக்களவை உறுப்பினராவார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராய், "எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை முழுவதுமாக தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆகவே என்னுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ அவர்கள் அனைவரும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.