×

ட்விட்டருடன் மல்லுக்கட்டும் மத்திய அரசு!

ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் முழுக்க முழுக்க பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு பாஜக ஆட்சியைப் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டு, அக்கட்சியின் முந்தைய ஐந்தாண்டு ஆட்சியிலிருந்தே எழுந்துவருகிறது. தற்போது அதே குற்றச்சாட்டை முன்வைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்பவர்களின் கணக்குகளை முடக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு(வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என விஜய் சொன்னது சரிதான் போல). குடியரசுத் தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையாக மடைமாற்றப்பட்டது. இதில் வன்முறையைத் தூண்டியவர்களின் கணக்குகளை
 

ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் முழுக்க முழுக்க பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு பாஜக ஆட்சியைப் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டு, அக்கட்சியின் முந்தைய ஐந்தாண்டு ஆட்சியிலிருந்தே எழுந்துவருகிறது. தற்போது அதே குற்றச்சாட்டை முன்வைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்பவர்களின் கணக்குகளை முடக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு(வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என விஜய் சொன்னது சரிதான் போல).

குடியரசுத் தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையாக மடைமாற்றப்பட்டது. இதில் வன்முறையைத் தூண்டியவர்களின் கணக்குகளை நிரந்தரமாக முடக்க மத்திய அரசு ட்விட்டருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ட்விட்டரோ 257 பயனர்களின் கணக்கைத் தற்காலிகமாக முடக்கி, சில தினங்களுக்குப் பின் பயன்படுத்த அனுமதியளித்தது. இதனால் மத்திய அரசு அதிருப்தியானது. உடனே ஐடி அமைச்சகத்தின் சார்பில் ட்விட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அந்நோட்டீஸில், உத்தரவைக் கடைப்பிடிக்கா விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.

இதற்குப் பதில் கூறிய ட்விட்டர் செய்தித் தொடர்பாளர், “”ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களுடைய நலனுக்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். தொடர்ந்து அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம். இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் முறையான பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்டுள்ளோம். அதேசமயம் அனைவரது கருத்துச் சுதந்திரத்தையும் நாங்கள் முழுவதுமாக மதிக்கிறோம்” என்றார். அவரின் இந்தப் பேச்சு அரசின் உத்தரவை மதித்து கணக்குகளை முடக்க மாட்டோம் என்பதையே வெளிப்படுத்துகிறது.

இச்சூழலில், விவசாயிகள் படுகொலை (#farmer genocide) என்ற ஹேஸ்டேக்கில் ட்விட்டரில் பதிவிட்ட பாகிஸ்தானுடன் தொடர்புடைய 1,178 காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நிரந்தரமாக மூட ட்விட்டருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாகப் பதிலளித்துள்ள ட்விட்டர், அரசின் உத்தரவை மதித்து அந்தக் கணக்குகள் பதிவிட்ட பதிவுகளைத் தீர விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறது. ஆனால், மத்திய அரசோ உத்தரவை ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு அக்கணக்குகளை முடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. இதனால் தான் ட்விட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையே அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் எப்போதும் அனைவரின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் வண்ணமே செயல்படும். அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப்பின் சில கருத்துகள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்தபோதிலும் warning lable உடன் அவரின் பதிவுகளை வெளியிட்டது. அதே நடைமுறையைத் தான் விவசாயிகளுக்கு ஆதரவான ட்வீட்களையும் பார்க்கிறது. இதனால் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் ட்விட்டருக்கு அழுத்தம் கொடுக்கிறது. 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 13,200 ட்விட்டர் கணக்குகளை முடக்கக் கோரி உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவற்றில் வெறும் 17 ட்விட்டர் கணக்குகளை மட்டுமே ட்விட்டர் முடக்கியது.

ட்விட்டர் ஓனரான ஜாக் டோர்சியும் விவசாயிகளுக்கு ஆதரவான ட்வீட்களுக்கு லைக் போட்டது மத்திய அரசை மேலும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. அவர் பாடகி ரிஹானாவின் ட்வீட்டையும், அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் கரேன் அட்டியாவின் “ரிஹானா இந்திய அரசை அசைத்துவிட்டார்” என்ற ட்வீட்டையும் லைக் செய்திருக்கிறார். இதை எப்படியோ அறிந்துகொண்ட மத்திய அரசு அவர் மீது பயங்கரமான கோபத்தில் இருக்கிறதாம். அவர் நடுநிலைமை தவறிவிட்டதாகவும் கொதித்திருக்கிறது. வாழ்க்க ஒரு வட்டம்டா!