×

சிஏஏ வன்முறையில் கைதான 3 மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் – டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு நிறைவேற்றியதும் நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததும் அனைவரும் அறிந்த ஒன்றே. அப்போது தலைநகரில் நடந்த போராட்டங்களும், காவலர்கள் அவர்களைக் கையாண்ட விதமும் மறக்க முடியாத கருப்பு பக்கங்கள். வடக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் எனக் கூறி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா, ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவிகள்
 

2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு நிறைவேற்றியதும் நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததும் அனைவரும் அறிந்த ஒன்றே. அப்போது தலைநகரில் நடந்த போராட்டங்களும், காவலர்கள் அவர்களைக் கையாண்ட விதமும் மறக்க முடியாத கருப்பு பக்கங்கள். வடக்கு டெல்லியில் நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் எனக் கூறி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா, ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவிகள் நடாஷா நர்வால், தேவகான கலீதா ஆகியோரை டெல்லி போலீஸ் கைது செய்தது.

மூவர் மீதும் பயங்கரவாத தடுப்புச் சட்டமான உபா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர்களுக்கு டெல்லி அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணையின் முடிவில் மூவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது பேசிய நீதிபதிகள், “மக்களுக்கு போராட்டம் நடத்தும் தார்மீக உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. போராட்டத்துக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு அளவுதான் வித்தியாசம்.

தங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களை அடக்க நினைக்கும் மத்திய அரசின் முனைப்பை பார்க்கும்போது, அந்த மெல்லிய கோடு மெல்ல மெல்ல மறைந்து வருவதாக தோன்றுகிறது. உபா சட்டம் என்பது பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டம். சாதாரண குற்றச் செயல்களுக்கு எல்லாம் இந்த சட்டத்தை பயன்படுத்துவது சரியான போக்கு அல்ல” என்று விமர்சித்தனர். இச்சூழலில் அவர்களை விடுவிக்காமல் டெல்லி போலீஸ் தாமதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளின் முகவரியைச் சரிபார்ப்பதிலும், விடுதலை செய்யும் நடைமுறையிலும் சுணக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது.

இச்சூழலில் தங்களை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் மூவரும் மனு தாக்கல் செய்தனர். அப்போது டெல்லி போலீஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு போலீஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தில் சரிபார்ப்புப் பணிகள் தாமதப்படுவதாகவும், ஒரே நாளில் அனைத்தையும் செய்ய எங்களிடம் மேஜிக் பவர் இல்லை என்றும் வாதிடப்பட்டது. இறுதியில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்றும், மூவரையும் உடனடியாக விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.