×

வேலை தேடுபவரா நீங்கள்..  தொடர் ஆட்குறைப்புக்கு இடையே வேலை வாய்ப்பளிக்கும் 5 நிறுவனங்கள்.... 

 

உலகம் முழுவதும் ஆட்குறைப்பு  நடவடிக்கை உச்சம் பெற்றிருக்கும் நிலையில், இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் இன்னும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்துக்கொண்டிருக்கின்றன.  

கொரோனா பரவல் மற்றும் ரஷ்யா - உக்கரைன் போரின் தாக்கத்தால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.  இதில் தாக்கு பிடிக்க முடியாமலும்,  செலவீனங்களை குறைக்கும் விதமாக பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஆட்குறைப்பு  நடவடிக்கையில் இறங்கிவிட்டன.  அதன்படி 2022 -23ம் ஆம் நிதியாண்டில் மட்டும்   ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டகிராம் நிறுவனமான மெட்டா, அமேசான் , பிரபல வீடியோ கான்பரன்ஸிங்  நிறுவனமான ஸூம் (Zoom), பிரபல திரைப்பட தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி ,  பிரபல தொழில்நுட்ப நிறுவனமான யாஹூ ஆகியவையும் ஆட்குறைப்பில் ஈடுபட்டது

இந்த தொடர் ஆட்குறைப்பு நடவடிக்கைகள், படித்து முடிவுத்து வேலை கனவுகளோடு  வெளியேறுபவர்களுக்கும், பணியில் இருந்து மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.  வரும் மாதங்களில் மேலும் பணிநீக்கங்கள் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன. சர்வதேச அளவில் இப்படி  மோசமான சூழ்நிலை இருந்தபோதிலும், இந்தியாவில் இன்னும் பல நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகின்றன.  அதிலும் இந்தியாவில் வேலை வாய்ப்பு அளிப்பதில்  ஐடி துறை முன்னணியில் இருந்து வருகிறது.  

பிரபல வேலைவாய்ப்பு தேடுதலமான நாகுரி ( Naukri.com) வெளியிட்டுள்ள  பிப்ரவரி 2023ம் ஆண்டுக்கான ஜாப் ஸ்பீக் அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தை விட  பிப்ரவரி வேலைவாய்ப்பு வளர்ச்சி  அடைந்துள்ளது.  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது நல்ல வளர்ச்சி என்றும், கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு 10% வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

இந்தியாவில்  Analytics Managers, Cloud Systems, Big Data Engineers, Augmented Reality QA Testers, and Administrators போன்ற சிறப்புப் பணிகளுக்கான தேவைகள் முறையே  29%, 25%, 21% மற்றும் 20% அதிகரித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் உள்ள 5 முன்னணி நிறுவனங்கள் அதிகம் வேலைவாய்ப்பு அளித்துள்ளன.  Price Waterhouse Coopers, இன்ஃபோசிஸ், ஏர் இந்தியா, டிசிஎஸ்,  விப்ரோ ஆகிய 5 நிறுவனங்கள்  வேலைவாய்ப்பை அறிவித்துள்ளன.,

இதில் கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவனமான ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்,  இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில்,   அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தனது  பணியாளர்களை 80,000 ஆக உயர்த்த உள்ளது.  

அதேபோல், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 4,263 வேலை வாய்ப்புகள் உள்ளதாக தொழில்முறை நெட்வொர்க்கிங் தளமான லிங்க்ட் இன் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், பொறியியல் - மென்பொருள் & QA பிரிவு, ஆலோசனை, திட்டம் & நிரல் மேலாண்மை போன்ற முக்கிய பணியிடங்களும்,   பொறியியல் - வன்பொருள் & நெட்வொர்க்குகள் மற்றும் IT & தகவல் பாதுகாப்பு போன்ற மற்ற பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.  

 ஏர் இந்தியா இந்த ஆண்டு 900 புதிய விமானிகள் மற்றும் 4,000 க்கும் மேற்பட்ட கேபின் க்ரூ உறுப்பினர்களை வேலைக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் பராமரிப்பு பொறியாளர்கள் மற்றும் விமானிகளை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

டாடா கன்சல்டன்சி சர்வீசஸின்( டிசிஎஸ்) HR மிலிந்த் லக்காட், தங்களது நிறுவனம் புதிய ஆட்களை பணியமர்த்தும் பணிகளை நிறுத்தவில்லை என்றும், இந்த ஆண்டின்  நான்காவது காலாண்டில்  சில ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தப்படலாம் என்றும் தெரிவித்தார்.  

இதேபோல்,  விப்ரோவில் இந்தியாவில் 3,292 வேலை வாய்ப்புகள் உள்ளதாக LinkedIn தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்  சேவைகள் & செயல்பாடுகள், மென்பொருள் பொறியியாளர்கள் , தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பாதுகாப்பு,  நிதி & கணக்கு மேலாண்மை போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக விப்ரோ தனது அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவித்துள்ளது.