புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா.. புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்க - மத்திய அமைச்சர் வேண்டுகோள்..
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழா புறக்கணிப்பு முடிவை மறுபரீசிலனை செய்யுமாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி எதிர்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் 64ஆயிரத்து 500 சதுர அடியில் , முக்கோண வடிவில், 4 மாடிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருகிற 28ம் தேதி சாவர்க்கர் பிறந்த நாளில் பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். ஆனால் மரபுப்படி நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை வலியுறுத்தி திமுக, விசிக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), சிவசேனா (யுபிடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஜனதா தளம் (ஐக்கிய) உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேறப்போவதில்லை என்னும் முடிவை மறுபரீசிலனை செய்து, திறப்பு விழாவில் பங்கேற்குமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரச்சினை இல்லாத விவகாரத்தில், பிரச்சினையை ஏற்படுத்தி விழாவை புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார். விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரீசிலனை செய்யவேண்டும் என்றும், விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.