96 மணி நேர கண்காணிப்பு காலம் முடிந்தது… பிரணாப் உடல் நிலை பற்றி அவர் மகன் பேட்டி
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அளித்திருந்த 96 மணி நேர அபாய காலகட்டத்தை அவர் கடந்துவிட்டார் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 10ம் தேதி டெல்லி ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உறைந்த ரத்தத்தை அகற்றும் அறுவைசிகிச்சை நடந்தது. இதன் பிறகு அவர் உடல்நிலை மோசமடைந்தது. அவர் கோமாவுக்கு சென்றார்.
நான்கு நாட்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, கவலைக்கிடமாகவே உள்ளார் என்று மருத்துவர்கள் கூறி வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “என் தந்தை பிரணாப் முகர்ஜிக்கு மருத்துவர்கள் கெடு வைத்த 96 மணி நேர கண்காணிப்பு முடிந்துவிட்டது. அவருடைய முக்கிய உள் உறுப்புக்கள் இயல்பாக செயல்படுகின்றன. வெளிப்புறத்திலிருந்து செய்யப்படும் தூண்டுதல்களுக்கும் சிகிச்சைக்கும் அவர் உடல் பதில் அளிக்கிறது. விரைவல் அவர் கண் விழிப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.