ஐ.பி.எஸ் அதிகாரியாக மீண்டும் வருவேன்! – குஜராத்தைக் கலக்கிய பெண் காவலர் உறுதி
குஜராத் அமைச்சரின் மகனை நடுத்தெருவில் நிற்கவைத்து கேள்வி கேட்டதால் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்ட பெண் காவலர் சுனிதா யாதவ், தான் மீண்டும் ஐ.பி.எஸ் அதிகாரியாக வருவேன் என்று உறுதி ஏற்றுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் நள்ளிரவில் சாலையில் சுற்றித் திரிந்தவர்களைக் காவலர் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தினார். அப்போது தாங்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியும் அவர்களை அனுமதிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த அன்றே அவர் வேறு இடத்துக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், அன்றே அவர் ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் வெளியானது. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மிரட்டல் காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையே சுனிதா யாதவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை என்று சூரத் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். அவர் மீது விசாரணை நடந்து வருவதால் தற்போது ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.