திருச்சி – சரக்கு வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்வு- அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்
திருச்சி : 01.09.20
நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 565 சுங்கச்சாவடிகள் உள்ளது, இதில் தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை 5% முதல் 10% வரை உயர்த்தப்படுவது வழக்கம், அதன்படி 26 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் முதல் மற்ற 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி அதாவது இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்பட்டது, ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால் கட்டண உயர்வு ஏப்ரல் 16ம் தேதியில் இருந்துதான் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில் 21 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது, ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட சமயபுரம், திருப்பராய்த்துறை பொன்னம்பலம்பட்டி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில் சரக்கு வாகனங்களில் வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து சுங்க சாவடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது….
சமயபுரம் சுங்கச்சாவடியில் கார் வேன் போன்ற வாகனங்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் வருகிறோம் 10 சக்கர கனரக வாகனங்களுக்கு மட்டும் ஐந்து ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை சுங்கச்சாவடியில் கார் வேன் பேருந்து கனரக வாகனங்கள் அனைத்திற்குமே ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
முக்கொம்பு சுங்க சாவடியில் கனரக வாகனங்களுக்கு மட்டும் ஐந்து ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் இ- பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து சுங்கச்சாவடியில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக சென்று கொண்டுள்ளது.