கடவுளை பார்க்க சென்று கடவுளிடம் சென்ற 165 பக்தர்கள்!
உத்தரகாண்ட்டில் உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் கடந்த 49 நாட்களில் மட்டும் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்டில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சார் தாம் யாத்திரையில், இந்த சீசனில் பக்தர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், இந்த அதிகப்படியான வருகையுடன், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. ஏப்ரல் 19 அன்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி நுழைவாயில்கள் திறக்கப்பட்டு சார் தாம் யாத்திரை தொடங்கியதிலிருந்து, வெறும் 49 நாட்களில், உடல்நலக் கோளாறுகள், பெரும்பாலும் மாரடைப்பு காரணமாக 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. அதன்படி, சராசரியாக ஒரு நாளைக்கு மூன்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கடினமான மலைப்பகுதி என்பதால் மாரடைப்பு ஏற்பட்டு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமகா கேதார்நாத் வழித்தடத்தில் 80 பேரும், பத்ரிநாத் வழித்தடத்தில் 48 பேரும், யமுனோத்ரி வழித்தடத்தில் 21 பேரும், கங்கோத்ரி வழித்தடத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த யாத்திரை நவம்பர் 13 வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது, இதனால் இன்னும் ஐந்து மாத யாத்திரைக் காலத்தில் பக்தர்களின் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.