×

ஓடும் ரயிலில் ஏற முயன்று சக்கரத்தில் சிக்கி அதிகாரி பலி!

 

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி தண்டவாளத்தில் விழுந்த ரயில் நிலைய அதிகாரி ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் கதிஹர் மாவட்டத்திலுள்ள சல்மாரி ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் அப்பாஷ் நாராயணன் கான். நேற்று வழக்கமாக தன்னுடைய பணியை செய்வதற்கு ரயில் நிலையம் வந்தார். அதிகாலை 5 மணியளவில் கதிஹர் ரயில் நிலையத்துக்கு நியூ ஜல்பைகுரி - அமிர்தசரஸ் ரயில் வந்துள்ளது. 

இந்த ரயில் மேற்குவங்காளத்திலிருந்து பஞ்சாப் வரை செல்லக்கூடியது. நாராயணன் கான் நடைமேடைக்கு வந்தடைந்தபோது அந்த ரயில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அதை பிடிப்பதற்காக வேகமாக ஓடி வந்து ரயிலில் ஏறிய போது, நாராயணன் கான் கால் தவறி தண்டவாளத்திற்குள் விழுந்தார்.  இதனால் ரயிலின் சக்கரம் அவர் மீது ஏறியது.

இந்த விபத்தில் அதிகாரி அப்பாஷ் நாராயணன் கான் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் சிறிது தூரம் சக்கரத்தில் மாட்டி இழுத்துச் சென்றது. தகவறிந்து காவல் துறை அங்கு வந்தனர். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டது. அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.