புதுச்சேரி: கொரோனா பரிசோதனைக்கு பெண்களை அழைத்து வந்து தனியாக விட்டுச் சென்ற அதிகாரிகள்!
புதுச்சேரியில் கொரோனா சந்தேகம் காரணமாக வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்த இரு இளம் பெண்களை அழைத்துச் சென்று மருத்துவமனையில் விட்டுவிட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு வர இரண்டு நாட்கள் ஆகும். அதுவரை வீட்டிலேயே இருங்கள் என்று கூறியுள்ளனர். மருத்துவமனையில் தங்க வேண்டும் என்று கூறிதான் அழைத்து வந்தார்கள், திரும்பிச் செல்ல பணம் இல்லை என்று கூறியபோது, மருத்துவமனையில் இருந்தவர்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. இதனால் அவர்கள் மருத்துவமனையிலேயே நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர்.
தங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கிராமத்தினர், உறவினர்களை கேட்டபோது கொரோனா பயம் காரணமாக யாரும் அவர்களை வந்து அழைத்துச் செல்லவில்லை. அரசு உதவி கிடைக்குமா என 1077, 104 எண்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது அலட்சியமான பதிலே கிடைத்தது. இதனால் வீட்டுக்கு செல்ல வழியின்றி இருவரும் அழத் தொடங்கினர். கடைசியில் இவர்கள் நிலை அறிந்து மனம் இறங்கிய உறவினர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இவருவரையும் அழைத்துச் சென்று வீட்டில் விட்டார்.
இளம் பெண்கள் இருவரை அம்போவென விட்டுவிட்டு அரசு ஊழியர்கள் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரையும் இப்படி அலட்சியப்படுத்தக் கூடாது, குறிப்பாக இளம் பெண்களை இப்படி அழைத்துவந்து விட்டுவிட்டு செல்வது சரியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.