×

கர்நாடகாவில் கடைகளின் ஆங்கில பெயர் பலகையை அடித்து உடைத்து போராட்டம்

 

கர்நாடகாவில் கட்டாயம் கன்னட பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று தலைநகர் பெங்களூருவில் கன்னட அமைப்பினர் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த கடைகளின் பெயர் பலகைகளை உடைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் இருப்பதாகவும் அவற்றை கன்னட மொழியில் வைக்க வேண்டும் என்றும் கன்னட அமைப்பினர் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இன்று பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளியில் பிரபல வணிக வளாகம் மற்றும் கடைகளின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பெயர் பலகைகளில் கன்னட மொழி இல்லை என்றும் போராட்டம் நடத்திய கன்னட ரக்சன வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகள் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை உடைத்து எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதுமட்டுமின்றி அனைத்து பெயர் பலகைகளும் முழுமையாக கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெங்களூரு நகரில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மெக்டனால்ஸ் உணவகம், அழகு நிலையம், சிறிய பெரிய நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றின் ஆங்கில பெயர் பலகைகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஆங்கில விளம்பர பலகைகளையும் சேதப்படுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை கைது செய்தனர். தேவனஹள்ளி பகுதி மட்டுமின்றி கேஆர்புரம் மற்றும் பிரிகேட் சாலை உள்ளிட்ட பல இடங்களில் கன்னட அமைப்பினர்கள் பல குழுக்களாக சென்று பல கடைகளில் ஆங்கில பெயர் பலகையை அடித்து உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பலர் கன்னட அமைப்புனர்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போராட்டம் நடத்தியவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக அரசு கொண்டு வந்த 60 சதவீத கன்னடம் என்ற விஷயத்தை பெயர் பலகைகளில் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.