பிரியங்கா பங்களா விவகாரம்: மிகப்பெரிய தவறு செய்யும் பா.ஜ.க அரசு! – காங்கிரஸ் எம்.பி எச்சரிக்கை
எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து அரசு சார்பில் வழங்கப்பட்ட பங்களாவை காலி செய்யும்படியும் வாடகை பாக்கியை செலுத்தும்படியும் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது மிகப்பெரிய தவறு என்று காங்கிரஸ் எம்பி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உ.பி-யில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. டெல்லியில் அவருக்கு வழங்கப்பட்ட பங்களாவை காலி செய்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி துள்சி இந்த செயலை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பிரதமருக்கு அடுத்த படியாக பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள நபர்கள் காந்தி குடும்பத்தினர். பிரியங்கா விவகாரத்தில் வி.பி.சிங் அரசு செய்தது போன்ற தவற்றைப் பா.ஜ.க அரசும் செய்துள்ளதாக கருதுகிறேன். வி.பி.சிங் காலத்தில் ராஜீவ்காந்திக்கு அளிக்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு எந்த ஒரு மாற்று ஏற்பாடும் செய்யப்படாமல் திரும்பப் பெறப்பட்டது. இதன் விளைவு படுகொலையில் முடிந்தது.
மத்திய அரசு செய்வது தவறுதான். அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் இவ்வளவு முரண்டு பிடிக்க வேண்டுமா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரியங்கா, உடனடியாக பங்களாவை காலி செய்துவிட்டு தன்னுடைய அதிரடி அரசியலைத் தொடர வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.