×

2 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!!

 

 இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, ஜப்பான் சென்றுள்ளார்.  

ஜப்பானில் வருடாந்திரம் நடைபெறும்  15வது இந்தியா - ஜப்பான் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக  டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர்  மோடி ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.  ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி,  ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கிறார்.  அத்துடன் மாநாட்டின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் வருகையால் கடைசி  நேரத்தில் அமெரிக்கா உடனான வர்த்தக பேச்சு வார்த்தையை ஜப்பான் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இதனால் அமெரிக்கா - ஜப்பான் இடையிலான வரிப்பகிர்வு மற்றும் சுமார் 48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உடன் நிர்வாக மட்டத்தில் விவாதிக்க வேண்டிய விசயங்கள் உள்ளது தெரியவந்ததால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் கூறியுள்ளது

ஜப்பான் பயணத்தை முடித்துகொண்டு பின்னர் பிரதமர் மோடி 31ம் தேதி சீனா செல்ல இருக்கிறார். அங்கு நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்  பங்கேற்கும் அவர்,  சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.  அமெரிக்காவின் வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில், முக்கிய நாடுகளின் தலைவர்களுடன்  நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  

இதனிடையே ஜப்பான் பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,  டோக்கியோவில் தரையிறங்கினேன். இந்தியாவும், ஜப்பானும் தங்கள் வளர்ச்சி ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், இந்த பயணத்தின்போது பிரதமர் இஷிபா மற்றும் பலரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது ஏற்கனவே உள்ள கூட்டாண்மைகளை ஆழப்படுத்தவும், ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராயவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.