ஜி20 மாநாடு - உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி!
ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தந்து வரும் நிலையில், அவர்களை பிரதமர் மோடி வரவேற்று வருகிறார்.
இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஜி-20 மாநாடு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமான மூலம் இந்தியா வந்தடைந்தார். அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார் .அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஜோ பைடன் சந்தித்து பேசினார். இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது. ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் நிலையில் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, மனிதவளம் போன்றவற்றை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள இது மிகச்சிறந்த நல்வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தந்து வரும் நிலையில், அவர்களை பிரதமர் மோடி வரவேற்று வருகிறார். சர்வதேச நாணய நிதிய தலைவி கிறிஸ்டலினா ஜார்ஜிவா, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா உள்ளிட்ட தலைவர்கள் வருகை பாரத் மண்டபத்திற்கு வருகை தந்த நிலையில், அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இதேபோல், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்று வருகிறார்.