பயணியை எட்டி உதைத்த போலீஸ் - ரயிலில் நடந்த அராஜகம் -வைரலாகும் வீடியோ
கர்நாடகாவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் கடந்த ஞாயிறு அன்று மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் சென்றிருக்கிறது.
கன்னூர் ரயில் நிலையத்தில் வந்தபோது டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே போலீசார் ரயிலில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து இருக்கிறார்கள். அப்போது பயணி ஒருவரிடம் கேட்டபோது, அதற்கு அவர் தனது டிக்கெட்டை காணவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
பின்னர் நடந்த விசாரணையில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தது தெரிய வந்திருக்கிறது. அந்த நபர் மதுபோதையில் இருந்திருக்கிறார் . இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் அந்த பயணியை தனது கைகளை பின்னால் கட்டி உட்கார வைத்து அவரை காலால் எட்டி உதைக்கிறார் போலீஸ். இதை அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து விடுகிறார்.
இதை கண்டு போலீசார் அவரை எச்சரிக்கிறார். அதுவும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது . இந்த வீடியோவை அந்த பயணி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் அந்த போலீசுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட அந்த போலீசாரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் டிக்கெட் பரிசோதகருடன் வந்த போலீசாரிடமும் விசாரணை நடந்து வருகிறது.