×

நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்கக்கோரி வழக்கு - இன்று விசாரணை 

 

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  திறக்க வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

வருகிற மே 28ஆம் தேதி சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ள நிலையில் , மத்திய அரசின் இந்த விழாவை நிராகரிக்க திமுக, காங்கிரஸ், திரிணாமுல்  காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் கட்சிகள் என 19 கட்சிகள் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டன. 
 


இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என மக்களவை செயலகம் மற்றும் மத்திய அரசுக்கு  உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுமக்கள் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  வழக்கறிஞர் சி ஆர் ஜெயா சுகின் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் இந்திய அரசியல் அமைப்பை மத்திய அரசு மீறியுள்ளது அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.