×

ரூ.10,000 மாத சம்பளம் டூ பில்லியனர் - Paytm ஓனர் விஜய் சேகரின் சுவாரஸ்மான கதை!  

 

இந்தியாவில் இன்று ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மிக பிரபலமாக இருக்கலாம். போன் பே, கூகுள் பே, வாட்ஸ்அப் பே பல பே-க்கள் வந்தாலும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் டாப்பில் இருந்தது இந்திய நிறுவனமான பேடிஎம் (Paytm - Pay through Mobile) தான். இப்போதும் மற்ற நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்து இந்திய சந்தையில் நிலைத்து நிற்கிறது. அதற்கு அந்த நிறுவனத்தி ஐபிஓ (IPO listing) பெற்ற ஏகபோகமான வரவேற்பே சாட்சி. இந்தியாவில் வேறு எந்த நிறுவனத்தின் ஐபிஓ-வும் இந்தளவுக்கு வரவேற்பை பெற்றதே இல்லை. 

2010ஆம் ஆண்டு `கோல் இந்தியா' (Coal India) நிறுவனம் ஐபிஓ மூலம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திரட்டியது. தற்போது பேடிஎம் ரூ.18,300 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறது. முதலீட்டாளர்கள் பேடிஎம் ஐபிஓ-வை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்கும் பங்கு கிடைத்துவிடாதா என்ற ஆசையில் புக்கிங் செய்து வருகின்றனர். பேடிஎம் ஐபிஓ லிஸ்டிங் செய்யும் விழா இன்று நடைபெற்று வருகிறது. அதில் பேடிஎம் நிறுவனத்தை உருவாக்கிய விஜய் சேகர் சர்மா மிகவும் உருக்கமாகப் பேசி ஆனந்தக்கண்ணீர் வடித்திருக்கிறார்.

அப்போது பேசிய அவர், "எனக்கு 27 வயதாக இருக்கும்போது மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய். இதனால் எனக்கு வரன் அமையவே இல்லை. 2004ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அப்போது எனது பெற்றோர்கள் எனது நிறுவனத்தை மூடிவிட்டு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கும் நிறுவனத்தில் ஊழியராகச் சேருமாறு என்னை வற்புறுத்தினார். அந்தச் சமயம் நான் பேடிஎம் சேவையைத் தொடங்கவில்லை. அப்போது இன்ஞினியராக பட்டம்பெற்ற நான், One97 Communications Ltd என்ற பெயரில் மொபைல் உபகரணங்களை விற்கும் நிறுவனத்தை நடத்திவந்தேன். 

அவர்கள் கருத்தைக் காதில் வாங்காமல் நான் என் பணியை தொடர்ந்தேன். ஆனால் தனது மகனின் வருங்காலம் என்னவாகுமோ, அவன் என்ன செய்கிறான் போன்ற கேள்விகள் எனது பெற்றோரை துளைத்துக் கொண்டிருந்தன. ஆனால் இன்று பேடிஎம் தொடங்கி என் நிறுவனம் வளர்ந்த பிறகு என்னுடைய சொத்துமதிப்பும் உயர்ந்தது. என்னுடைய சொத்துமதிப்பு குறித்து நாளிதழில் செய்தி வெளியானது. அதைப் படித்துவிட்டு எனது தாய் கேட்டார், "விஜய் உண்மையிலேயே உன்னிடம் இவ்வளவு சொத்து இருக்கிறதா?" என்று. அதை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு ஒரேயொரு ஆசை தான். Paytm என்று பொறிக்கப்பட்ட கொடி சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், ஹாங்காங், டோக்கியோ போன்ற வல்லரசு நாடுகளின்  தலைநகரங்களில் பறக்க வேண்டும். அந்த நாடுகளின் மக்கள் அதைப் பார்க்கும்போது பேடிஎம் ஒரு இந்திய நிறுவனம் என்று சொல்ல வேண்டும். இதுதான் என்னுடைய வாழ்நாள் கனவு” என்று கூறி உடைந்து அழுதுவிட்டார்.  2010ஆம் ஆண்டு மொபைல் ரீசார்ஜ் செய்யும் சேவையுடன் பேடிஎம் செயலியை தொடங்கினார் விஜய். அப்போது கணிசமான வரவேற்பைப் பெறவில்லை. 2016ஆம் ஆண்டு உபெர் நிறுவனம், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்காக பேடிஎம் நிறுவனத்தை கை தூக்கிவிட்டது.

அந்தச் சமயம் பிரதமர் மோடி பண மதிப்பிழப்பை செய்யும்போது தான் பேடிஎம்மின் மதிப்பு பெரும்பாலானோருக்கு தெரியவந்தது. ஓவர்நைட்டில் பேடிஎம் பேமஸானது. அன்று கொட்ட ஆரம்பித்த பணமழை இன்று வரை கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பேமஸான பேடிஎம் 2017ஆம் ஆண்டு கனடாவுக்குள் நுழைந்தது. 2018இல் ஜப்பானில் காலடி எடுத்துவைத்தது. 2017ஆம் ஆண்டே விஜய் சேகர் ஷர்மா இந்தியாவின் இளம் பில்லியனரானார். தற்போது அவரின் சொத்துமதிப்பு 2.4 பில்லியன் டாலர். 27 வயதில் மாத சம்பளம் 10 ஆயிரம் வாங்கினார் விஜய் ஷர்மா. 43 வயதில் அவரின் சொத்துமதிப்பு இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?