பட்டியலின மாணவியை கண்மூடித்தனமாக தாக்கும் விடுதி வார்டன்! அதிரவைக்கும் காணொலி
தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டத்தில் பட்டியலின பெண்கள் விடுதியில், மாணவியை விடுதி வார்டன் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வைரலாகிவருகிறது.
தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் உள்ள எஸ்.சி. பெண்கள் விடுதியில் கடந்த மாதம் 24 ஆம் தேதி, விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவியை ஒரு சிறிய காரணத்திற்காக வார்டனுக்கும் மாணவிக்கும் இடையே ஒரு சிறிய வாக்குவாதம் நடந்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தில் பொறுமை இழந்த வார்டன், ஒரு தடியை எடுத்து கொண்டு மாணவி என்றும் பார்க்காமல் கண்மூடித்தனமாக தாக்கினார். சக மாணவிகள் அவரைத் தடுக்க முயற்சித்த போதிலும், அவர் தொடர்ந்து இரக்கமின்றி அடித்து, திட்டி, திட்டிக்கொண்டே இருந்தார். இந்தக் கொடுமையைக் கண்ட சக மாணவர்கள் தங்கள் தொலைபேசிகளில் வீடியோவைப் பதிவு செய்தனர். இருப்பினும், வார்டன் மீதுள்ள பயத்தால் ஒரு மாதமாக இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருந்தனர்.
அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக மாணவிகள் அவரவர் வீடுகளுக்கு சென்றதால் தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டு அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், மாணவர்களின் பெற்றோர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றனர். இதற்கிடையில், மாணவி மீதான தாக்குதல் வீடியோ வெளியானதை அடுத்து மாணவர் சங்கத்தினர் மற்றும் பட்டியிலன உரிமை சங்கத்தினர் விடுதியின் முன் பெரும் போராட்டத்தை நடத்தின. வார்டன் பவானியை உடனடியாக பணியில் இருந்து நீக்கி, அவர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சமூக நலத்துறை டிடி இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். இதனையடுத்து அறிக்கையின் அடிப்படையில் பூபாலப்பள்ளி மாவட்ட கலெக்டர் ரகுல் ஷர்மா விடுதி வார்டன் பவானியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். விடுதியில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் முழு விசாரணை நடத்தி வருகின்றனர்.