×

"மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும்" 

 

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோவில், "புதுச்சேரியில் மழையால் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் எந்த பகுதிக்கும் செல்லவில்லை. வீட்டின் அருகில் உள்ள ஊசுடு ஏரியை மட்டும் பார்த்து விட்டு வந்துள்ளார். மழையால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச அரிசி, சர்க்கரை, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை ரங்கசாமி அறிவித்தார். 

ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு தலா  5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.  சிவப்பு ரேஷன் கார்டு வைக்க தகுதி உள்ளவர்கள் பலருக்கு மஞ்சள் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கும் அரசு தலா 5 ஆயிரம் வழங்க வேண்டும். முதலமைச்சர் அறிவித்த பணம் எப்போது கொடுக்கப்படும் என்று மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அறிவிப்போடு இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. மத்திய அரசு தற்போது எந்த மாநிலத்திற்கும் நிதி கொடுப்பது இல்லை. 

மக்களை பற்றி கவலைப்படாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் தற்போது அறிவித்த நிதி எல்லாம் பட்ஜெட்டில் வராதது. இதனை அவர் எவ்வாறு பெறுவார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதி பெற 5 ஆண்டுகள் போராடியும் மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை. புதுச்சேரியில் பல தொழிற்சாலைகளில் இளஞ்சிறார்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதனை புதுவை அரசு கண்டறிந்து அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் சேதம் அடைந்த சாலைகளை அரசு சீரமைக்க வேண்டும்” என்றார்.