×

அனைத்திலும் 50-50 அனுமதி... அதிரடி கட்டுப்பாடுகளுடன் புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு!

 

புதிய வகை ஒமைக்ரான் உலக நாடுகளை மட்டுமல்லாமல் இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் ஒமைக்ரான் உச்சத்தில் இருக்கிறது. மேலும் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் 495 பேர். இதனால் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கி வருகின்றன. வார இறுதியில் முழு ஊரடங்கு, இரவில் ஊரடங்கு என பழைய அஸ்திரங்களைக் கையிலெடுத்துள்ளன.

அப்படியே பழைய நிலைக்கு திரும்புகிறது இந்தியா. அந்த வகையில் புதுச்சேரி யுனியன் பிரதேசத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மால்கள், வணிக நிறுவனங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் திரையரங்குகள், உணவகங்கள், கலையரங்கம் உள்ளிட்டவற்றில் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கே இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு அமலில் உள்ளது. அதுவும் ஜன 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தமிழ்நாடு உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களிலும் 50 சதவீத பயணிகள் மட்டுமே இருக்க வேண்டும் யுனியன் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மதுபானக் கடைகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்திருந்த நிலையில், புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களிலிருந்து பலரும் புதுச்சேரியில் குவிந்தனர். இது நடந்து முடிந்த பிறகே அங்கே கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. அதன் விளைவாகவே கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளன.