×

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திறந்து வைப்பதுதான் சரி..  மல்லிகார்ஜூன் கார்கே 

 

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திறந்து வைப்பதுதான் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பு உரிமைக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் என்று மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதியன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோருக்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை. இந்திய குடியரசின் உச்ச சட்டமியற்றும் அமைப்பு இந்தியா நாடாளுமன்றம் மற்றும் இந்திய குடியரசு தலைவர் அதன் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரி. அவர் (குடியரசு தலைவர்) மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 

குடியரசு  தலைவர் இந்தியாவின் முதல் குடிமகன். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பு உரிமைக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும். மோடி அரசு பலமுறை அரசியலமைப்பு உரிமையை மதிக்கவில்லை.பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில்  இந்திய குடியரசு தலைவர் அலுவலகம் டோக்கனிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இது (குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது)  தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடி சமூகங்களில் இருந்து இந்திய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதை மோடி அரசு உறுதி செய்துள்ளது.