சீனாவை பொருளாதார ரீதியில் அடிக்க தொடங்கிய இந்தியா… சீன திட்டங்களை முடக்கிய மகாராஷ்டிரா அரசு
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து விரட்டியபோது இரு தரப்பும் மோதி கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற உணர்வு நாட்டு மக்களிடம் நிலவுகிறது.
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொலைத்தொடர்பு சேவையை 4ஜி சேவையாக மேம்படுத்துவதற்கான டெண்டரில் சீன நிறுவனங்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான 3 சீன நிறுவனங்களின் திட்டங்களை முடக்கியுள்ளது.