×

கர்நாடகா, பீகார் மாநில முதல்வர்களுக்கு கொரோனா உறுதி

 

கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கும், பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதே சமயம், இந்தியாவில் டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் இன்று தொடங்கியது. 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி நடைபெற்றுவருகிறது. வயது வித்தியாசமின்றி, அனைவரையும் தாக்கிவரும் கொரோனாவுக்கு, அரசியல் தலைவர்களும் இலக்காகிவருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மிகவும் லேசான பாதிப்பு உள்ளதாகவும், தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். மேலும்  தன்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல், பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, நிதிஷ்குமாரும், அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.