×

"மாணவிகளைப் போலத் தெரியவில்லை! சாக்கடை"- ஜென் சி தலைமுறையினரை விமர்சித்த கங்கனா ரணாவத்

 

இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பண்பாடு தெரியாத ஜென் சி தலைமுறையினர் சாக்கடை போன்றவர்கள் என பாஜக எம்பியும், பிரபல நடிகையுமான கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பியும், பிரபல நடிகையுமான கங்கனா ரணாவத், “இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பண்பாடு தெரியாத ஜென் சி தலைமுறையினர் சாக்கடை போன்றவர்கள். அவர்கள் எப்படிப்பட்ட மாணவர்கள்? இது என்ன மாதிரியான அருவருப்பான மொழி? எந்த வகையில் பார்த்தாலும் அவர்கள் மாணவர்களைப் போலத் தெரியவில்லை. இந்திய சமூகம் எப்படி இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். இந்தப் பெண்களின் பெற்றோர் மிகவும் பாரம்பரியமானவர்கள். ஆனால் அவர்களுடைய மகள்கள் இப்படி அருவருப்பான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதற்குப் பிறகு சமூகத்தில் அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கும்? அவர்கள் எந்த மாதிரியான பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்களா? ஒரு சமூகமாக, இதை எந்த வகையிலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

போராட்டக்காரர்கள் அறிவுத்திறன் குறைந்தவர்கள். சிஜேஐயை விமர்சிப்பது தேசத்திற்கு எதிரானது. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து நாட்டில் அமைதி, சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட வேண்டும். அரசியல் லாபத்திற்காக சிலர் போராட்டங்களை தூண்டுகின்றனர். நீதி அமைப்பின் மீது நம்பிக்கை வைப்பதே இந்தியாவின் பலம். 75 வயதான நமது பிரதமர் குறிவைக்கப்பட்டார். அவரது மறைந்த தாயாரைப் பற்றியும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் அவதூறாக பேசப்பட்டது. நாங்களும் மாணவர் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறோம். ஆனால் இவர்கள் என்ன மாதிரியான மாணவர்கள்? இவர்கள் பயன்படுத்தும் ஆபாசமான மொழி என்ன? எந்த வகையில் இவர்கள் மாணவர்களைப் போலத் தெரிகிறார்கள்? எதிர்காலத்தில் இவர்கள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களையோ அல்லது சட்ட உதவியையோ நாட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கான செலவை இவர்களின் பெற்றோரால் ஏற்க முடியுமா? அதற்கான வசதி இவர்களிடமே இல்லை. நாங்கள் 16 வயதிலிருந்தே எங்களுடைய வாழ்க்கையையும் தொழிலையும் உருவாக்கி வருகிறோம். எங்கள் பெற்றோருக்கு நாங்கள் ஒருபோதும் சுமையாக இருந்ததில்லை. ஒரு சமூகமாக இதுபோன்ற நடத்தையை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.