×

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,800 உதவித்தொகை வழங்குகிறதா மத்திய அரசு?

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3,800 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளதாக வலம் வரும் வாட்ஸ்அப் செய்தி போலியானது என்று மத்திய அரசின் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் பெருகினாலும், அதன் மூலம் பரவும் வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளின் எண்ணிக்கை அதை விட அதிகாமாகியிருக்கிறது. வேலையில்லாமல் இருப்பவர்கள் டைம்பாஸுக்காக இதுபோன்ற செய்திகளைப் பரப்புகிறார்களா அல்லது அதைப் பரப்புவதற்காகவே திட்டமிட்டு ஒரு குழு இயங்குகிறதா என்பது தெரியவில்லை. பல்வேறு
 

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3,800 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளதாக வலம் வரும் வாட்ஸ்அப் செய்தி போலியானது என்று மத்திய அரசின் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் பெருகினாலும், அதன் மூலம் பரவும் வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளின் எண்ணிக்கை அதை விட அதிகாமாகியிருக்கிறது.

வேலையில்லாமல் இருப்பவர்கள் டைம்பாஸுக்காக இதுபோன்ற செய்திகளைப் பரப்புகிறார்களா அல்லது அதைப் பரப்புவதற்காகவே திட்டமிட்டு ஒரு குழு இயங்குகிறதா என்பது தெரியவில்லை.

பல்வேறு சமூக வலைதளங்கள் இயங்கினாலும் போலிச் செய்திகளைப் பரப்ப ஏதுவான ஊடகமாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் குழுக்கள், தனிப்பட்ட உரையாடல் என எங்கு காணினும் பார்வேர்ட் மெசெஜ்களே.

இச்செய்திகளின் உண்மைத் தன்மையை மக்களுக்கு உணர்த்த பல்வேறு செய்தி நிறுவனங்கள் fact checking என்ற முறையை முன்னெடுத்துள்ளனர். நாம் சோம்பேறி கொள்ளாமல் ஒவ்வொரு செய்தியின் உண்மையை அறிந்துகொள்ள முற்பட்டால், இதற்கான தேவையே எழுந்திருக்காது.

அந்த வகையில் தற்போது வேலையில்லா பட்டதாரிகளுக்கு மத்திய அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுவதாக ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் பரவிவருகிறது. அச்செய்தியில், “நாட்டில் 18-50 வயது வரம்புக்குள் இருக்கும் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் வகையில் ஒரு திட்டத்தை பிரதமர் அறிவித்திருக்கிறார்.

அதன்படி, 18-25 வயதினருக்கு ரூ.1,500, 25-30 வயதினருக்கு ரூ.2,000, 31-35 வயதினருக்கு ரூ.3,000, 36-45 வயதினருக்கு ரூ.3,500, 46-50 வயதினருக்கு ரூ.3,800 உதவித்தொகை வழங்கப்படும்” என்று குறிப்பிட்டு, அதனுடன் ஒரு லிங்கும் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த லிங்கை கிளிக் செய்து ஒவ்வொருவரும் தங்களது தகவல்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

வழக்கம் போல இச்செய்தி உண்மையா, போலியா என்று தெரியாமல் பலரும் பகிர்ந்து, தங்களது சுய விவரங்களைப் பதிவுசெய்துவந்துள்ளனர். இச்செய்தி போலியானது என்று மத்திய அரசின் செய்தி நிறுவனமான Press Information Bureau (PIB) மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் ட்விட்டரில், “இதுபோன்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை. உதவித்தொகை வழங்கப்படும் என்பது போலியான செய்தி. இதுபோன்ற செய்திகளை நம்பி பகிராதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதே போலிச் செய்தி 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வலம் வந்ததும் கவனித்தக்கது. அப்போது ரூ.3,500 உதவித்தொகை என்று குறிப்பிட்டிருந்ததை வயது வரம்புக்கு ஏற்றவாறு தனித்தனியாகப் பிரித்து மீண்டும் அதே போலிச் செய்தியை இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் விஷமிகள் பரப்பியிருக்கிறார்கள்.

ஏற்கனவே, டிஜிட்டல் உலகில் பயனர்களின் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. ஆகவே தேவையின்றி இதுபோன்ற செய்திகளில் வலம்வரும் லிங்குகளை கிளிக் செய்து மோசடி வலையில் சிக்காமல் பாதுகாப்பாக இருங்கள் என்பதே இதன் மூலம் உணர்த்தவரும் செய்தி.