×

ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து- 9 பேர் உயிருடன் எரிந்தனர்

 

தெலங்கானா மாநிலம் நாம்பள்ளி பஜார்காட்டில் ரசாயன குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிருடன் எரிந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  உள்ள நாம்பல்லி பஜார்காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிருடன் எரிந்தனர். நான்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் கீழ் தளத்தில் இருந்த ரசாயன குடோனில் ஏற்பட்ட  தீ விபத்தில் நான்கு மாடி கட்டிடம் முழுவதும் பரவியது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து 4 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சில தொழிலாளர்கள் தீயில் சிக்கியதாக கூறப்படுகிறது. தொழிலாளர்களை காப்பாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

தீயணைப்புப் படையினரால் இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் அதிக அளவில் இருக்கும் இடத்தில் நடந்த  விபத்தால், கடும் புகை மற்றும் ரசாயன நாற்றத்தால் சுற்றுவட்டார மக்கள் அவதிப்படுகின்றனர். தீ மளமளவென பரவும் அபாயம் உள்ளதால், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், அனைவரையும் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் சில தொழிலாளர்கள் ரசாயன கிடங்கில் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டு வர அதிக நேரம் ஆகலாம் என கூறப்படுகிறது.