ஹரியானாவில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 2ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு.. அனைத்து நாட்களிலும் இரவு ஊரடங்கு தொடரும்
ஹரியானாவில் கூடுதல் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 2ம் தேதி வரை லாக்டவுனை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. அதேசமயம், அனைத்து நாட்களிலும் இரவு ஊரடங்கு தொடரும் என்று அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் 2வது அலையின் தீவிரம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் பல மாநிலங்கள் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்து வருகின்றன. இருப்பினும் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளன. இதனால் வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்ப வருகின்றனர்.
ஹரியானாவில் ஊரடங்கை ஆகஸ்ட் 2ம் தேதி வரை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. அதேசமயம் கூடுதலாக சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில தலைமை செயலாளர் விஜய் வர்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரெஸ்ட்ராண்ட்கள் 50 சதவீத இருக்கை பயன்பாடுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி வரை உணவு டெலிவரி செய்யலாம். அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி.
மால்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி திறக்க அனுமதி. ஜிம்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி. திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 100 பேர் கலந்து கொள்ள அனுமதி. 50 சதவீத இருக்கை பயன்பாடுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி உள்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இரவு 11 மணி முதல் காலை 5 மணி இரவு ஊரடங்கு அனைத்து நாட்களிலும் அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.